சேகர் ரெட்டி வீட்டில் ஐடி ரெய்டு.. பறிமுதலான நகை, பணம் யாருடையது? ராமதாஸ் கிடுக்கிப்பிடி
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் சீனிவசா ரெட்டி வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கம் யாருடையது என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : பா.ம.க நிறுவனர் ராமதாஸ், சேகர் ரெட்டி வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கக் கட்டிகள் யாருடையது என மத்தியரசு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சேகர் ரெட்டிக்கு உதவிய வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் 3 இடங்களிலும் வேலூரிலும் நடத்தப்ப்டட வருமான வரித்துறை சோதனையில் ரூ.105 கோடி பணமும், ரூ. 40 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்கக்கட்டிகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஒரு குழுவினரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இவ்வளவு பணம் சிக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது நண்பர் சீனவாச ரெட்டி, இருவரின் முகவர் பிரேம் ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 8 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
அந்த சோதனையில் ரூ.95 கோடி அளவுக்கு பழைய ரூ.500, ரூ.1000 பழைய தாள்களும், ரூ.10 கோடி அளவுக்கு புதிய ரூ.2000 தாள்களும கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அத்துடன் 125 கிலோ தங்கமும் அவர்களின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இரண்டாவது நாளாக இன்றும் சோதனைகள் தொடரும் நிலையில், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கத்தின் மதிப்பு மேலும அதிகரிக்கலாம் என்று வருமான வரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வேலூரில் உள்ள அவரது இல்லத்தில் ஆள் இல்லாததால் அந்த வீடு மூடி முத்திரையிடப்பட்டுள்ளது. அந்த வீட்டில் சோதனை நடத்தப்படும் போது மலைக்க வைக்கும் அளவுக்கு பணம் கிடைக்கக்கூடும்.
இந்தியாவில் ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. அதற்குப்பிறகும் ரூ.95 கோடி அளவுக்கு பழைய தாள்களை வைத்திருக்கிறார்கள் என்றார், கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் எவ்வளவு பழைய ரூபாய் தாள்களை பினாமி பெயர்களில் வைப்பீடு செய்திருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி, ரூ.10 கோடி அளவுக்கு ரூ.2000 தாள்கள் சிக்கியுள்ளன. அவை அனைத்தும் 1 முதல் 100 வரை வரிசை எண் கொண்ட கட்டுக்களாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
நாடு முழுவதும் புதிய ரூபாய் தாள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. ரூ.2000 பணம் எடுப்பதற்காக ஏடிஎம் வால்களில் கோடிக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். வாரத்திற்கு ரூ.24,000 எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தாலும் வங்கிகளில் பணம் இல்லாததால் அந்த அளவுக்கு எடுக்க முடியவில்லை.
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் கடந்த 30 ஆம் தேதி அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்ட நிலையில், 10 நாட்களாகியும் இன்னும் பாதிப் பணத்தைக் கூட எடுக்க முடியவில்லை. இத்தகைய சூழலில் மொத்தமாக ரூ. 10 கோடிக்கு புதிய 2000 ரூபாய் தாள்களை ஒருவர் குவித்து வைத்திருக்கிறார் என்றால் அது வங்கி அதிகாரிகள் ஒத்துழைப்பின்றி சாத்தியமில்லை.
வருமானவரி சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகிய மூவரில் மதன்மையானவர் சேகர் ரெட்டி தான். மற்றவர்கள் அவரின் உதவியாளர்கள் தான். இந்த சேகர் ரெட்டி சாதாரணமானவர் அல்ல. தமிழக அரசியலில் அதிமுக, திமுக ஆகியவற்றின் மூத்த தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருப்பவர்.
கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் இவர்களின் ஆளுகையில் உள்ள பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் ஒப்பந்தங்கள் யாருக்கு ? என்பதை சேகர் ரெட்டி தான் தீர்மானிக்கிறார்.
தமிழகம் முழுவதும் மணல் அள்ளும் ஒப்பந்தம், கிழக்குக் கடற்கரை சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல சாலைப் பணிகளை சேகர் ரெட்டி செய்து வருகிறார்.
சேகர் ரெட்டி, ராமலிங்கம் உள்ளிட்டோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் யாருக்கு சொந்தமானது? என்பது பற்றி விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும் புதிய ரூபாய் தாள்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சேகர் ரெட்டிக்கு ரூ.10 கோடிக்கான புதிய ரூ.2000 தாள்களை வழங்கிய வங்கி அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.