மனைவியுடன் மனஸ்தாபம் – குழந்தைகளுடன் லாரி டிரைவர் தற்கொலை
செங்கோட்டை: செங்கோட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் லாரி டிரைவர் ஒருவர் குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
செங்கோட்டை அருகேயுள்ளது தேன் பொத்தை கிராமம். இந்த கிராமத்தை சார்ந்தவர் வேல்முருகன் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.இவருக்கும் சுமதி என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 5 வயதில் பரசுராம்,மூன்று வயதில் புகழேந்தி என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.சுமதிக்கும், வேல்முருகனுக்கும் கடந்த சிலதினங்களுக்கு முன் பண விஷயத்தில் தகராறு நடந்துள்ளது.
இதனால் கோபமடைந்த சுமதி கணவனிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளையும் விட்டு விட்டு கடையநல்லூரில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் விரக்தியோடு இருந்துவந்த வேல் முருகன் நேற்று மனம் உடைந்த நிலையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பண்பொழிக்கு சென்றுள்ளார்.
அங்குஉள்ள பெரியகுளம் பகுதிக்கு சென்றவர். திடீர் என குழந்தைகளை ஆழமான பகுதிகளுக்குள் தூக்கி வீசி விட்டு தானும் விஷம் குடித்து அந்த குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து உறவினர்கள் புகார் கொடுத்ததின் பேரில் அச்சன்புதூர் போலீசார் ,செங்கோட்டை தீ அணைப்புதுறையினர்,தென்காசி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அரவிந்தன்,மற்றும் போலீசார் விரைந்து வந்து இரவில் குளத்தில் மூன்று பேரின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.
இரவில் குழந்தை புகழேந்தியின் உடல் மட்டும் கிடைத்தது.இன்றுகாலைமுதல் மீண்டும் தேடும் பணி நடைப் பெற்றது.அதில் பரசுராம் உடல் கிடைத்தது.வேல் முருகன் உடலைத் தேடும் பணி நடந்து வருகிறது.
கணவன் மனைவி சண்டையினால் கணவன்,இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 3பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.