ஒன்னு இல்ல.. ரெண்டு இல்ல.. 25 முறை ஸ்டாலினுடன் பேசிய செங்ஸ்.. தோப்பு 'பொளேர்'
எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் 25 முறை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசினார் என்று எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் போட்டுடைத்துள்ளார்.
பெருந்துறை: கல்வி அமைச்சர் செங்கோட்டையன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலினை 25 முறை தொடர்பு கொண்டு பேசியது தற்போது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் அன்றாடம் ஒரு பிரச்சனை எழுந்த வண்ணம் உள்ளது. எதிரிக்கட்சியாக அதிமுகவினரால் சித்தரிக்கப்படும் திமுக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதை ஓபிஎஸ் அணியில் உள்ள தோப்பு வெங்கடாச்சலம் போட்டுடைத்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாசலம், தனது ஊரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினார். இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது.
முகத்திற்கு நேர் ஸ்டாலின் கேள்வி
நேற்று, சட்டசபையில், அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு கருத்தை கூறினார். எத்தனை முறை என்னிடம் பேசினீர்கள் என்று செங்கோட்டையன் முகத்திற்கு நேராக ஸ்டாலின் கேட்டார்.
திமுகவோடு செங்கோட்டையன் உடன்படிக்கை
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சு அவைக் குறிப்பில் இருந்து அவசர அவசரமாக நீக்கப்பட்டது. இதிலிருந்து செங்கோட்டையன் கட்சிக்கு துரோகம் இழைத்து திமுகவோடு மறைமுக உடன்படிக்கை செய்ய முடிவு செய்துள்ளார் என்று எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் அவரது நண்பர்களிடம் கூறியுள்ளார்.
கிழந்த செங்கோட்டையன் முகம்
அது முடியாமல் போயுள்ளது என்பது சட்டசபையில் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தான் யோக்கியன் என்று சட்டசபையில் செங்கோட்டையன் பேசும் போது, அந்த முகத்திரையை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கிழித்துவிட்டார்.
செங்கோட்டையன் போடுவதெல்லாம் வேஷம்
இதற்கு செங்கோட்டையனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. எனவே, செங்கோட்டையன் அதிமுக ஆட்சியை தாங்கிப் பிடிக்கும் தூண் என்று கூறுவதெல்லாம் வெறும் வேஷம்.
25 முறை ஸ்டாலினுடன் பேச்சு
மரியாதை, நாகரீகம் கருதி ஸ்டாலின், இரண்டு வார்த்தையோடு முடித்திருக்கிறார். செங்கோட்டையன் 25 முறை ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியது அப்பாவி அதிமுக தொண்டனுக்கு தெரியாது என்று தோப்பு வெங்கடாச்சலம் கூட்டத்தின் போது தனது சக நண்பர்களுடன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ வளர்த்த தோப்பு
கடந்த முறை 5 ஆண்டுகள் தோப்பு வெங்கடாச்சலம் அமைச்சர் பதவியில் நிலையாக இருந்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த தோப்பு வெங்கடாச்சலம் செங்கோட்டையனுக்கு போட்டியாக ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.