தஷ்வந்த் வெளியே வந்தால் பலருக்கும் ஆபத்து... ஹாசினியின் தந்தை கதறல்!
சிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் வெளியே வந்தால் பலருக்கும் ஆபத்து என்று ஹாசினியின் தந்தை பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை : குழந்தை ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் வெளியே வந்தால் பலருக்கும் ஆபத்து ஏற்படும் என்று ஹாசினியின் தந்தை பாபு கூறியுள்ளார்.
சென்னை முகலிவாக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 7 வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்திற்கு ஜாமின் கிடைத்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஹாசினியின் தந்தை பாபு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது : எனது மகள் இறந்த மரண சம்பவத்தில் இருந்து என்னுடைய மனைவி இன்னும் வெளிவரவில்லை.
வேதனையாக இருக்கிறது
தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது வேதனை அளிக்கிறது. தஷ்வந்தின் தந்தை நிச்சயம் தனது மகனை வெளியில் கொண்டுவருவேன் என்று சவால் வடுகிறார்.
பலரையும் கொல்வான்
தஷ்வந்த் வெளியே வந்தால் பலரையும் கொல்லத் தயங்க மாட்டான். தஷ்வந்திற்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நினைத்தோம் ஆனால் அவன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதோடு, ஜாமினும் கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
எனது மகளுக்கு நீதி வேண்டும்
என்னுடைய மகளுக்கான நீதி கிடைக்க வேண்டும், தஷ்வந்திற்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று பாபு கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று பேசிய இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் குழந்தைகள் மீது பாலியல் வன்முறையை நடத்துபவர்கள் மீது சட்டம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் செய்பவர்கள் எளிதில் வெளிவந்துவிடும் சட்டமுறையில் மாற்றம் வேண்டும்.
சட்டத்தின் மீது நம்பிக்கை போய் விடக் கூடாது
சட்டத்தின் மீதான நம்பிக்கை மக்களுக்கு போய்விடக்கூடாது. சட்டத்தை நம்பியே அனைவரும் உள்ளனர் இதனை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.