சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றுவது சாத்தியமா? ஆச்சார்யா என்ன சொல்கிறார்
பெங்களூர் சிறையில் இருந்து சென்னை சிறைக்கு மாற்றுமாறு சசிகலாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றால் மட்டுமே சாத்தியமாகும் என்று மூத்த வக்கீல் கூறியுள்ளார்.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று மூத்த வக்கீல் ஆர்.பி.ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவால் பெங்களூர் சிறையில் இருந்தபடியே தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கமுடியாது என்பதால் தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு பெங்களூர் சிறை கண்காணிப்பாளரிடம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்து மூத்த வக்கீலும், சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக தரப்புக்காக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானவருமான, ஆர்.பி.ஆச்சார்யா கருத்து தெரிவிக்கையில், ஒரு சிறையில் இருந்து மற்றொரு ஊரில் உள்ள சிறைக்கு மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட சிறை நிர்வாகம் முடிவு செய்யலாம்.
ஆனால் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பொறுத்தவரையில் தண்டனையை பெங்களூர் தனி நீதிமன்றம் பிறப்பித்திருந்தாலும் அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. எனவே சசிகலாவை சென்னை புழல் சிறைக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அவ்வாறு அவர் சென்னை சிறைக்கு மாற்ற அனுமதிக்கப்பட்டாலும் அதை எதிர்த்து வழக்குத் தொடர முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய சசிகலா தரப்பு ஆலோசனை நடத்தி வருகிறது.
ஒரு வழக்கில் சிறைக்குச் சென்ற 30 நாள்களுக்குள் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி.