‘வாழை’ படம் போல இன்று காலையில் நடந்த கோர சம்பவம்.. சரக்கு ஆட்டோவில் சென்ற கூலித் தொழிலாளர்கள் பலி!
தென்காசி: அண்மையில் வெளியான மாரி செல்வராஜின் 'வாழை' திரைப்படம், படம் பார்த்தவர்களை உலுக்கிய நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் இன்று தென்காசி மாவட்டத்தில் நடந்துள்ளது. விவசாய தொழிலாளர்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது அந்த வாகனம் கவிழ்ந்ததில் பெண்கள் 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே இன்று காலையில் ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழந்தனர். சுமார் 20 விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ஆட்டோ, சுரண்டை - வாடியூர் சாலையில் விபத்தில் சிக்கியது. வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்ததில் ஜானகி (52), வள்ளியம்மாள் (60), பிச்சி (60) ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த 17 பேர் சிகிச்சைக்காக தென்காசி, ஆலங்குளம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான 'வாழை' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, ரசிகர்களை கலங்க வைத்து, கண்களை குளமாக்கி அனுப்புகிறது. உண்மைச் சம்பவங்களை களமாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
கடந்த 2001 ஆம் ஆண்டு, நெல்லை பகுதியில் விவசாயக் கூலி தொழிலாளர்கள் 19 பேர் பலியான நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மாரி செல்வராஜ் 'வாழை' படத்தை இயக்கியுள்ளார். வாழை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் அனைவரையும் உலுக்கிய நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இன்று தென்காசியில் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே விவசாயப் பணிகளுக்காக சரக்கு ஆட்டோவில் சுமார் 20 கூலித் தொழிலாளிகள் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஆட்டோ சாலைக்கு கீழே பள்ளத்தில் கவிழ்ந்து 3 பேர் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications