ஆயில் பாத், ஷாம்பு குளியலுக்கு தடை… குற்றாலத்தில் கடையடைப்பு சுற்றுலா பயணிகள் அவதி
குற்றாலம்: எண்ணைய் குளியல், ஷாம்பு குளியல் போன்றவற்றுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை மறு ஆய்வு செய்யக் கோரி குற்றாலம், ஐந்தருவி பகுதியில் இன்று கடையடைப்பு நடந்து வருகிறது.
இந்த கடயைடைப்புப் போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் பொருட்கள் வாங்க முடியாமல், சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
அருவிகள் நிரம்பிய குற்றாலம்
இந்தியாவிலேயே அருவிகள் நிரம்பப்பெற்ற பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள்தான். அதிலும் தமிழகமும்,கேரளாவும் முதலிடத்தில் இருக்கிறது.
7 அருவிகள்
இந்தியாவிலேயே அருவிகள் நிரம்பப்பெற்ற ஒரே பகுதி என்றால் தமிழகத்தில் உள்ள குற்றாலம் மட்டுமே. ஐந்தருவி, செண்பக தேவிஅருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, தேனருவி, சிற்றருவி என 7 அருவிகள் ஒருசேர அமையப்பெற்ற குற்றாலம் புராணங்களில் புனிதம் நிறைந்த பகுதியாக போற்றப்படுகிறது.
மாசு
பல்வேறு சிறப்புக்கள் வாய்ந்த குற்றாலத்தில் கடந்த சில வருட காலமாக குளிக்க வருபவர்கள் அருவி நீரை மாசுபடுத்தும் வண்ணம் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் குளியல் நடத்துவதால் அருவி தண்ணீர் மாசுபடுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
உயர்நீதிமன்றம் தடை
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு எதிரொலியாக குற்றால அருவியை பாதுகாக்கவும், சுற்றுலா பயணிகளின் அடிப்படை தேவையை மேம்படுத்தும் வகையிலும் 37 நிபந்தனைகளை விதித்து நீதிமன்றம் உத்திரவிட்டது.
எண்ணைய் குளியலுக்குத் தடை
இதன் எதிரொலியாக குற்றாலத்தில் கடந்த 25ந் தேதி முதல் எண்ணை குளியல், தடாகத்தில் துணி துவைத்து, சோப்பு, ஷாம்பு பயன்படுத்துதல், மது குடித்து குளிக்க வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து தடை விதித்தனர்.
கடைகளில் விற்பனை அவுட்
இதையடுத்து அருவிக்கரை பகுதியில் உள்ள கடைகளில் சோப்பு, ஷாம்பு, சீயக்காய் போன்றவை முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டன.
ஆயில் மசாஜ் காலி
ஆயில் மசாஜ் கடைகள் திறக்கப்படவில்லை. அருவி தடாகத்தில் துணி துவைக்க வந்தோரை போலீசார் திருப்பி அனுப்பினர். தடாகத்தின் 4 புறங்களிலும் கயிறு கட்டி தடை விதிக்கப்பட்டது.
தண்ணி அடிக்கவும் முடியலையே
அதே போல் சாலை ஓரங்களில் மதுபானங்கள் குடிக்கிறார்களா? என்பதையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இந்த நடவடிக்கைகளுக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு இருந்ததை காணமுடிந்தது.
ஆயில் மசாஜுக்குத் தடை.. அதிருப்தி
ஆனால் ஆயில் மசாஜிற்கு தடை விதித்திருப்பது வெளியூர் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. குற்றாலத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்வதற்கு முன்பு ஆயில் மசாஜ் செய்வது வழக்கம். குற்றாலம் என்றால் அருவிகள் எவ்வளவு பிரசித்தி பெற்றதோ, அதே போல் ஆயில் மசாஜும் பிரபலமாகும்.
அனைத்தும் மூடப்பட்டன
குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி கரைகளில் ஏராளமான ஆயில் மஜாஜ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மூடப்பட்டன.
வாழ்வாதாரம் போனதே
இந்நிலையில் இங்கு பல லட்சம் ரூபாய் கட்டி பேருராட்சியில் கடைகளை ஏலம் எடுத்தவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி கடந்த சிலதினங்களுக்கு முன் கூட்டம் போட்டு பேருராட்சியில் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுப்பதாக பேருராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
அருவிகள் நீர்வரத்து குறைவு
இந்நிலையில் கடந்த பலநாட்களாக மழை இல்லாததால் குற்றாலத்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் வியாபாரம் இல்லாமல் தவித்த வியாபாரிகள் இன்று உயர்நீதின்ற தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி ஐந்தருவி ,குற்றாலத்தில் கடையடைப்பு நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்று குற்றாலம்,ஐந்தருவி,உள்ளிட்ட பகுதிகளில் முழுமையாக கடைகளை அடைத்து போராட்டத்தில் அவர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
மேலும் நேற்று மாலை வனப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அருவியில் வெள்ளப் பேருக்கு ஏற்பட்டு அருவிகளை தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் அலைமோதுகிறது. உணவுக்கு சுற்றுலாப் பயணிகள் தென்காசி, செங்கோட்டை, மேலகரம், பிராணூர் பார்டர் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அம்மா உணவகம் வருமா…
சீசனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம், படகு குழாம் உள்ளிட்ட பகுதிகளில் "அம்மா" உணவகம், மருந்தகம் போன்றவைகள் அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.