ஒரு வாரமாக நடைபெற்ற பட்டாசு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம் வாபஸ்! காரணம் இதுதான்
சிவகாசியில் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்யக் கோரி நடந்து வந்த பட்டாசு ஆலை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சிவகாசி: எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வரி குறைப்பு பரிசீலிக்கப்படும் என்ற உறுதியைத் தொடர்ந்து பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி வரியால் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பட்டாசுப் பொருட்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதனை குறைக்குமாறு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மாற்றம் செய்யப்படாமலேயே ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது. அதனை கண்டிக்கும் விதமாக ஜுன் 30ம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
முடங்கிய உற்பத்தி
பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக விற்பனையாளர்களும் போராட்டத்தில் குதித்தனர். வேலைநிறுத்தம் காரணமாக சிவகாசி உள்பட விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 700க்கும் பட்டாசு ஆலைகளும், 600க்கும் மேற்பட்ட விற்பனைக் கடைகளும் மூடப்பட்டன.
வேலைஇழப்பு
கடந்த 5 நாட்களாக பட்டாசு உற்பத்தித் தொழில் முற்றிலும் முடங்கிப் போனது. ஆறாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தம் நீடித்ததால் 5 லட்சம் பேர் வேலை இழந்தனர்.
உறுதி
இதனிடையே வரி குறைப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய வணிக வரித்துறை செயலர் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக, உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
வாபஸ்
வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆசைத்தம்பி கூறினார்.