சிவகங்கை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக் கொலை... 6 பேர் கைது
மானாமதுரை: திருப்புவனம் அருகே சொத்து தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே கிளாதரி பொய்கை வயலில் தோட்டத்து வீட்டில் வசித்த சங்கி,70, இவரது ஒரே மகள் முத்தம்மாள்,50, பேரன்கள் பொன்னுசாமி,மெக்கானிக் ராஜா,20 ஆகியோர் ஜூலை 15ம் தேதி எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்த குடும்பத்தில் முத்தம்மாளின் இரு மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்ததாலும், இளைய மகன் சரவணக்குமார் ராணுவத்தில் பணிபுரிவதாலும் தப்பினர்.
இந்த கொலை வழக்கு குறித்து எஸ்.பி., துரை உத்தரவில் டி.எஸ்.பி.,க்கள் ராமசாமி, புருஷோத்தமன், இன்ஸ்பெக்டர்கள் சாந்தி, பரக்கத்துல்லா, ரமணி அடங்கிய தனிப்படையினர் விசாரணை செய்து வருகின்றனர். முத்தம்மாள் குடும்பத்தினர் விவசாயத்திற்காக பொய்கைவயலுக்கு வந்துள்ளனர். விவசாயம், ஆடு, மாடுகள் வளர்த்துக்கொண்டு அங்கேயே தங்கியுள்ளனர். இவரது இடத்தை சுற்றிலும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர், பல ஏக்கர் வாங்கி குவித்துள்ளார். முத்தம்மாளின் இடத்தை வாங்க முயற்சி நடந்தது. முத்தம்மாள் அசைந்து கொடுக்கவில்லை. இடத்தை காலி செய்ய மறுத்துள்ளார்.
இது தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபருக்கும் முத்தம்மாளுக்கும் பிரச்னை எழுந்துள்ளது. முத்தம்மாளின் நெருங்கிய உறவினர் ஒருவர் மேலூர் மில்கேட் பகுதியில் வசிக்கிறார். இவருக்கும், முத்தம்மாளுக்கும் இட பிரச்னை இருந்துள்ளது. இது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் உயிரிழந்த முத்தம்மாள் குடும்பத்தினரின் உறவினர்களுக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிவகங்கை மாவட்ட போலீசார் திங்கட்கிழமையன்று 6 பேரை கைது செய்தனர். நிலத்தகராறு காரணமாகவே 4 பேரை எரித்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.