மிசன் 234: தொடரட்டும் மேம்பாடு... ஜொலிக்கட்டும் தமிழ்நாடு... அதெல்லாம் சரிதான்... ஆனா
சென்னை: தண்ணீரில் தத்தளிக்குது தமிழ்நாடு...ஆனால் அதைப்பற்றி கவலைப்படாத ஆளும் அதிமுகவோ நாளொரு பிரச்சார வாசகத்தை வெளியிடுகிறது அதிமுகவின் ஐ.டி.பிரிவு. இப்போது புதிதாக வெளியிட்டுள்ள வாசகம் ‘‘தொடரட்டும் மேம்பாடு; ஜொலிக்கட்டும் தமிழ்நாடு'.
கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 150 சீட்களை வென்று ஆட்சியமைத்தது. 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்று குறிவைத்து மிசன் 234 என்ற பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளது ஐ.டி அணி.
எதிர்கட்சியினர் பிரச்சாரம்
பாமகவின் ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' ‘முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு' வாசகங்கள் மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. திமுகவின் ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்', தேமுதிகவின் ‘மக்களுக்காக மக்கள் பணி' ஆகிய பிரச்சார வாசகங்கள் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகிவிட்ட நிலையில், அதிமுக கடந்த 20 நாட்களில் மூன்று விதமான பிரச்சார வாசகங்களை வெளியிட்டுள்ளது.
அதிமுகவின் ஐ.டி பிரிவு
தமிழகத்தில் 234 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று தலையை பிய்த்துக்கொண்டு யோசிக்கும் ஐ.டி பிரிவு பல்வேறு பிரச்சார வாசகங்களை தயார் செய்து வாரம் ஒன்றாக ரிலீஸ் செய்து வருகிறது.'ஒளிரும் நிகழ்காலம்; மிளிரும் வருங்காலம்', 'தழைக்கட்டும் தமிழகம்; செழிக்கட்டும் தமிழர்கள்' ஆகிய இரண்டு வாசகங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
ஜொலிக்கட்டும் தமிழ்நாடு
மூன்றவதாக ‘தொடரட்டும் மேம்பாடு; ஜொலிக்கட்டும் தமிழ்நாடு' என்ற வாசகத்தை அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆனால் தமிழ்நாடு எப்படி ஜொலிக்கிறது என்பதை மழை நன்றாக உணர்த்தி விட்டது.
அறிமுகமே அமர்களம்தான்
ஒரு விசயத்தை அறிமுகப்படுத்த இப்பொழுதெல்லாம் அதிகம் மெனக்கெடுகிறார்கள் அரசியல்வாதிகள். அதிமுகவின் பிரச்சார வாசகத்தை சென்னை எலியட்ஸ் கடற்கரையில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
நல்லா கோஷம் போடணும்
உயர்கல்வி அமைச்சர் பி.பழனியப்பன், சமூக நலத்துறை அமைச்சர் ப.வளர்மதி ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்று இதனை அறிமுகத்தினர். 'தொடரட்டும் மேம்பாடு; ஜொலிக்கட்டும் தமிழ்நாடு' என்ற பிரச்சார வாசகங்களை அடங்கிய பதாகைகளை ஏந்திய தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்களை எழுப்பினர்.
சமூக வலைத்தளங்களில்
அதிமுக ஐ.டி. அணியைச் சேர்ந்தவர்கள் "இது போன்ற பிரச்சார வாசக அறிமுக நிகழ்ச்சியை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
மழை வந்துருச்சே
சென்னையில் மட்டும் அல்லாமல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மழை வந்த இவர்களின் எண்ணத்தில் மண்ணை போட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
இளைஞர்களை கவர
அதிமுகவின் சமூகவலைதள பிரச்சாரம் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக நினைக்கும் ஐ.டி பிரிவினர், ஃபேஸ்புக் வாயிலாக 37 லட்சம் பேரையும், வாட்ஸ்அப் மூலமாக 27 லட்சம் பேரையும் தங்கள் கட்சி அடைந்திருப்பதாக நினைக்கின்றனர்.
பதிலடி எப்பூடி
அதிமுகவினர் தயாரிக்கும் ஒவ்வொரு பிரச்சார வாசகத்திற்கும் பதிலடியாக பலரும் இணையதளங்களில் மீம்களை தயாரித்து உலாவ விடுகின்றனர் என்பதுதான் இதில் கூடுதல் சுவாரஸ்யம்.