சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு புகை மூட்டம்.. வீடுகளுக்குள்ளும் சூழ்ந்ததால் மக்கள் அவதி
சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு புகை மூட்டம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
சென்னை: தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட வெடிகளால் சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு புகை மூட்டம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று வட இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை மாநகர் முழுவதும் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பட்டாசு புகையால் சென்னை மாநகர் முழுவதும் கடந்த 2 நாட்களாக காற்று மாசு பலமடங்கு அதிகரித்து புகை மண்டலமாக காட்சி அளித்தது.
வீட்டிற்குள்ளும் சூழ்ந்த புகை
இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாசிக்க முடியாமல் திணறினர். வீடுகளுக்குள்ளும் புகை மண்டலம் சூழ்ந்ததால் மக்கள் வீட்டிற்குள்ளும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது.
புகை மூட்டத்தால் அவதி
சுற்றுச்சூழலும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. புகை மூட்டத்தால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். ரயில்களின் வேகமும் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டது.
சவுகார்பேட்டையில்தான் அதிகம்
இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் எதிர்பார்த்ததைவிட 8 மடங்கு அதிக காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவாக சவுகார்பேட்டையில் மிதக்கும் துகள்களின் அளவு 777 மைக்ரோ கிராமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மடங்கு அதிகரிப்பு
இதேபோல் திருவல்லிக்கேணி, பெசன்ட்நகர், நுங்கம்பாக்கம், சவுகார்பேட்டை, தி.நகர் என அனைத்து இடங்களிலும் காற்றில் மிதக்கும் துகள்கள் அளவு நிர்ணயிக்கப்பட்ட 100 மைக்ரோ கிராமை விட பல மடங்கு அதிகமாக இருந்தது.
குறைந்த அளவாக பெசன்ட்நகரில் 387 மைக்ரோ கிராம இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு கூட சவுகார்பேட்டையில் 178 மைக்ரோ கிராமும், பெசன்ட்நகரில் 102மைக்ரோ கிராம் தான் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 10 மடங்கு அதிகரித்துள்ளது.