ரஜினி, கமல் காலடிக்கு 'ஷிப்ட் ஆக' காத்திருக்கும் 'அறிவுஜீகள்'
தமிழகத்தின் அறிவுஜீவிகள் என தம்மை அழைத்துக் கொள்வோர் தற்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் காலடிக்கு தாவ தயாராக உள்ளனர்.
Recommended Video
சென்னை: தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஆலோசகர்கள் என பீற்றிக் கொண்ட புதிதாக உருவெடுத்திருக்கும் அறிவுஜீவிகள் என்போர் இப்போது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் காலடிக்கு தாவ தயாராக இருக்கிறோம் என்பதை பகிரங்கமாகவே பேட்டிகள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை தங்களுக்கு ஆலோசனை தருவதற்கு, தேர்தல் அறிக்கைகள் தயாரிப்பதற்கு, மாநாட்டு தீர்மானங்களை உருவாக்குவதற்கு ஆகிய பணிகளுக்கு கட்சி நிர்வாகிகள் அல்லாமல் பேராசிரியர்கள், அறிஞர்கள், வல்லுநர்களை பயன்படுத்தி வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் டிவி சேனல்களில் விவாதங்கள் என்பது பெருகிய நிலையில் புற்றீசல்கள் போல அறிவுஜீவிகள் முளைத்துவிட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த அறிவுஜீவிகள் 'மெய்சிலிர்க்க' வாதங்களை முன்வைத்து 'வெளுத்து வாங்குகின்றனர்'. பொதுவாக விவாத களங்களில் இறங்குபவர்களுக்கு தத்துவார்த்த சார்பு இருத்தல் அவசியம். அந்த தத்துவார்த்தத்தின் அடிப்படையில் விவாதிப்பது இயல்பு.
விவாதங்களில் அடியாட்கள்
ஆனால் தமிழகத்து திடீர் அறிவுஜீவிகளுக்கு அதெல்லாம் தேவையில்லை என்றாகிவிட்டது. ஒரு மணிநேரமோ, 2 மணிநேரமோ தாம் நினைத்ததை பேசிவிட்டு வருவது அல்லது தமக்கு பிடிக்காத ஒருவர் பேசினால் அவரை பேசவிடாமல் தடுப்பது என்பதுதான் இந்த அறிவுஜீவிகளின் வரலாற்று கடமையாகிவிடுகிறது.
தலைவர்களிடம் பணம் கறத்தல்
இதில் பெருங்கொடுமை என்னவெனில் இத்தகைய தத்துவார்த்த புரிதல்களற்ற மனிதர்களையும் அறிவுஜீவிகள் என நம்பி பக்கத்தில் வைத்து கொள்கின்றனர் புதிய அரசியல் தலைவர்கள். சிக்கிவிட்டது அடிமை! என இவர்களும் அந்த புதிய தலைவர்களுக்கு அறிக்கைகள் எழுதுவது, மேடைகளில் பேசுவதற்கு குறிப்புகள் தருவது என சைட் பிசிசினஸில் களமிறங்கி கரன்சி கறந்துவிடுகின்றனர்.
பணத்துக்காக அலையும் அறிவுஜீவிகள்
அப்படி அழைக்கின்ற தலைவர்களுக்கும் இந்த திடீர் அறிவுஜீவிகள் நேர்மையாக இருக்கிறார்களா? எனில் இல்லை... இந்த மாதம் அவரிடம்.. அடுத்த மாதம் இவரிடம்... என அடிமைகளை மாற்றிக் கொண்டே இருப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இப்போது ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அரசியல் களத்துக்கு வர காத்திருக்கிறார்கள்.
அறிவுஜீவிகளிடம் நிழல் யுத்தம்
ஆகையால் இந்த திடீர் அறிவுஜீவிகளிடையே மாபெரும் நிழல் யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது. ஆம் ரஜினி, கமலின் காலடியில் விழுந்து முதல் இடத்தை பிடிப்பது யார் என்பதற்கான யுத்தமே இது. இந்த சோ கால்ட் அறிவுஜீவிகள், ரஜினிக்காகவும் கமல்ஹாசனுக்காகவும் உருகி உருகி வியாக்யானம் தருவதைப் பார்த்தாலே எளிதாக புரிந்து விடும்.. ஆஹா... அண்ணன் அங்க துண்டை போட்டுட்டாரு என்பது அப்பட்டமாகவே தெரிகிறது..
தமிழகத்தின் சாபக்கேடு
இன்னும் சிலரோ, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ரொம்பவும் நல்லவர்கள்தான்.. அவர்களுக்கும் செல்வாக்கெல்லாம் இருக்கிறது.. என்ன ஒரே ஒரு குறை.. கூட கொள்கையை வகுத்து தரக் கூடிய ஆட்கள் இல்லை என்பதுதான்.. என அப்பட்டமாகவே அய்யா என்னை கூப்பிடுங்க என கெஞ்சுகிற கேவலத்தை வெளிப்படுத்துகின்றனர். பொருளாதார வல்லுநர்கள், அரசியல் ஆய்வாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் நிறைந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய 'துண்டு போடும்' அறிவுஜீவிகள் காட்டில்தான் மழை பெய்வது என்பது சாபக்கேடு என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.