'குட்கா உற்பத்தி மையம்'... டிஜிபி அலுவலகம் முன்பு பேனர் வைத்து கலக்கிய சமூக ஆர்வலரால் பரபரப்பு!
சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தின் முன்பு குட்கா உற்பத்தி மையம் என கட்டப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : தமிழக காவல்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு குட்கா உற்பத்தி மையம் என்று பேனர் வைத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிப்பதற்காக அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. வருமான வரித்துறையினர் செங்குன்றத்தில் குட்கா வியாபாரி ஒருவரிடம் பறிமுதல் செய்த டைரிக் குறிப்பின் அடிப்படையில் இந்த விவரங்களை தமிழக அரசுக்கு அனுப்பினர்.
சட்டசபையிலும் திமுகவினர் இந்த விவகாரத்தை எழுப்பி பிரச்னையை கிளப்பினர். மேலும் அவர்கள் சில புகைப்படங்களையும் சட்டசபையில் காட்டினர் அதில் சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதை வெட்டவெளிச்சமாக்கினர்.

அதிகாரிகளுக்கு தொடர்பு?
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற டிஜிபி. ராஜேந்திரனுக்கு தமிழக காவல்துறை இயக்குனருக்கான பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. காவல்துறையைச் சேர்ந்த சிலர் டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர் குட்கா ஊழல் விவகாரத்தில் அடிபட்டதால் காவல்துறையை சேர்ந்தவர்களே சில நாட்களுக்கு முன்னர் கண்டனம் தெரிவித்து முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தனர்.

தில்லாக பேனர் கட்டிய இளைஞர்
இதனிடையே சென்னை மெரினா கடற்கரை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று இளைஞர் ஒருவர் திடீரென பேனர் ஒன்றை கட்டினார். இதில் குட்கா உற்பத்தி மையம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பேனரில் டி.ஜி.பி. ராஜேந்திரனின் படமும் இடம்பெற்றிருந்தது.

குட்கா உற்பத்தி மையம் என பேனர்
டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் செல்வதற்கு உள்ள நான்கு சாலைகளில் மெரினா காமராஜர் சாலையில் குட்கா பேனரை மூடிய வாசல் அருகே கட்டிய இளைஞர் கோஷம் எழுப்ப தொடங்கினார். உடனடியாக போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து மெரினா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். டிஜிபி அலுவலக வாசலில் தைரியமாக பேனர் கட்டியவர் மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பது தெரிய வந்தது.

சமூக ஆர்வலர் செந்தில்முருகன் கைது
சமூக ஆர்வலரான செந்தில்முருகன் கடந்த 20-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டி.ஜி.பி. மீது புகார் அளித்துள்ளார். அதில் நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று போராட்டம் நடத்தியதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை தலைமை அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட செந்தில்முருகனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications