ரூ. 25 லட்சம் பணம் கொள்ளையில் அரசியல்வாதி மகனுக்கு தொடர்பு- 7 பேரிடம் விசாரணை
25 லட்சம் ரூபாய் செல்லாத நோட்டுக்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: செல்லாத ரூபாய் நோட்டுக்களுக்கு வங்கியில் இருந்த புது ரூபாய் நோட்டுக்களை கமிஷனுக்கு மாற்றியதாக வங்கி ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழைய ரூபாய் நோட்டுக்கள் 25 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதில் அரசியல்வாதி ஒருவரின் மகனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள சாஸ்திரி நகர் 1-வது அவென்யூவில் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி கிளை உள்ளது. அதில், மேலாளராக லோகேஷ்வரராவ், காசாள ராக இளங்கோவன் ஆகியோர் வேலை செய்கின்றனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவிக்கவே கள்ளப்பணம், கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் அதனை வெள்ளையாக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.
மக்களுக்கு மாற்றித்தர மத்திய அரசு அனுப்பிய பணத்தை கறுப்பு பணம் வைத்திருந்தவர்களுக்கு மாற்றித்தர வங்கி அதிகாரிகளே கையாடல் செய்துள்ளனர். கமிஷனுக்கு மாற்றிக்கொடுத்த கறுப்பு பணத்தை மாற்றி வைக்க முயன்ற போது அந்த பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இப்போது பணத்தை பறிகொடுத்த வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணம் கொள்ளை
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இளங்கோவன் ரூ.25 லட்சத்துக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை காரில் எடுத்துச் சென்றார். பல்லாவரத்தில் உள்ள ஜமீன் பல்லாவரம் வழியாக காரில் சென்றபோது 2 பைக்கில் வந்த 4 பேர் காரை திடீரென வழி மறித்தனர். தாக்குதல் நடத்தி இளங்கோவனிடம் இருந்த ரூ.25 லட்சத்தை பறித்துச் சென்றனர்.
திருடனுக்கு தேள் கொட்டியது
திருடனுக்கு தேள் கொட்டியது போல அதிர்ச்சி அடைந்த இளங்கோவன் மீண்டும் சாஸ்திரி நகரில் உள்ள தனது வங்கி கிளைக்கு இரவோடு இரவாக சென்று அங்கிருந்தவாறே ஆலோசனை நடத்தினார்.அப்போது ரோந்து வந்த சாஸ்திரி நகர் போலீஸார், நள்ளிரவில் வங்கி கிளை திறந்திருந்ததால் வங்கிக்குள் சென்று விசாரித்தபோது பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.
கமிஷனுக்கு பணம் மாற்றம்
இதுபற்றி மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் சாஸ்திரி நகர் வங்கியில் வசூலான பழைய பணத்தை மற்றொரு வங்கியில் கொடுத்து புதுப் பணத்தை பெற்று, அந்தப் பணத்தை தொழில் அதிபர்களிடம் கொடுத்து கமிஷனுக்கு அதிக பணம் சம்பாதிக்க முயன்றது உறுதி செய்யப்பட்டது.
வங்கி ஊழியர்கள் கைது
இதைத் தொடர்ந்து பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி மேலாளர் லோகேஷ்வரராவ், காசாளர் இளங்கோவன், கார் ஓட்டுநர் சக்தி வேல், ஊழியர் மணிகண்டன் மற்றும் மற் றொரு வங்கியான ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் முகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அரசியல்வாதியின் மகன்
இந்த கொள்ளை சம்பவத்தில் அரசியல்வாதியின் மகனுக்கு தொடர்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை கொண்டு சென்ற கார் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பணத்தை கொள்ளையடித்த நபர்கள் கார் ஓட்டுநர் சக்திவேலுக்கு தெரிந்தவர்கள் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.