விரைவில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை மாறும்.. கலெக்டர் வீர ராகவ ராவ் உறுதி
மதுரையில் இனி யாருக்கும் பிச்சை போட முடியாது : அப்படி என்ன செய்யப்போகிறார் கலெக்டர் வீரராகரவ ராவ்
மதுரை: மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி உள்ளார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியத்தற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாற்றுத்திறனாளிக்களுக்கான சேவை விருதை வழங்கி உள்ளார். இந்த விருது டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்த விருது பெற்றது தனக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது என்றும், இன்னமும் மாற்றுத்திறனாளிகளுக்காக நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும் மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி, மகளிர் சுய உதவிக்குழு மூலமாகவும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அரசின் திட்டங்கள் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த நிதியாண்டில் பல்வேறு துறைகள் மூலம் ரூ. 35 கோடி மதிப்பிலான திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 14 கோடியே 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனபதிபதி விருது கிடைத்த தன் மூலம் மதுரை மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான திட்டம் மேலும் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
இன்னும் 3 மாதத்தில் மதுரை மாவட்டம் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். இதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பிச்சை எடுப்பவர்கள் சாலைகள் மற்றும் அனைத்து இடங்களிலும் இருந்து மீட்கப்பட்டு அவர்களுக்கு நல்வாழ்விற்கான வழி ஏற்படுத்தித் தரப்படும் என்றார். இதில் முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை ஆட்சியர் வீரராகவ ராவ் குடியரசுத்தலைவர்களிடம் மதுரையில் சிறப்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தூய்மையாக நிர்வகித்தது, மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை செய்தது என மூன்று விருதுகளை வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.