மீண்டும் வருகிறது மழை... நாளை முதல் 2 நாட்களுக்கு.. தென் தமிழகத்தில் பெய்யலாமாம்!
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகத்தின் தென் பகுதிகளில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக ஸ்கைமெட் வானிலை இணையதளத் தகவல் தெரிவிக்கிறது.
கடந்த பெருமழை வெள்ளத்திற்குப் பிறகு தமிழகம் கிட்டத்தட்ட வறண்ட நிலையில்தான் உள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட தமிழகப் பகுதிகளில் மழை இல்லை. தொடர்ந்து வெயிலும், இரவில் பனியுமாக உள்ளது.
இந்த நிலையில் புதிய மழைக்கு தற்போது வாய்ப்பு வந்துள்ளது. இருப்பினும் இந்த மழை வட தமிழகத்தை விட தென் தமிழகத்திற்கே கிடைக்கும் என்றும் ஸ்கைமெட் தெரிவிக்கிறது.
வங்கக் கடலில் காற்றழுத்தம்
வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாம். இது மேற்கு நோக்கி நகரந்து வருகிறது. அதாவது தெற்கு இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது.
தென் தமிழகத்திற்கு மழை
இதன் காரணமாக தமிழகத்தின் தென் பகுதியில் நாளை முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் பகுதிகளில் பரவலாக லேசான மழை இருக்கலாமாம்.
2 நாட்களுக்கு
இந்த மழையானது 2 நாட்களுக்கு இருக்கலாம். குறிப்பாக நெல்லை, பாம்பன், தூத்துக்குடி பகுதிகளில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.
மதுரை
மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன மழைக்கு வாய்ப்பில்லை
இந்த மழையானது அதிகபட்சம் மிதமானதாக மட்டுமே இருக்கும் என்றும் கன மழைக்கு வாய்ப்பில்லை என்றும் ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.
சென்னையில் வெயில்தான்
அதேசமயம், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் லேசான காற்று வீசும் என்றும் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.