மே 1ம் தேதி ஸ்வாதி தினமாக அனுசரிப்பு: தெற்கு ரயில்வே
சென்னை: சென்னை இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஸ்வாதியின் நினைவாக மே மாதத்தின் முதல் வேலை நாள் ஸ்வாதி தினமாக அனுசரிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி- பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த வியாழக்கிழமை (மே 1) அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் ஆந்திரத்தைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஸ்வாதி உயிரிழந்தார்.மேலும் 14 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த நிலையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்த பெண் பொறியாளர் ஸ்வாதிக்கு தென்னக ரயில்வே சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
குண்டு வெடிப்பு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமையன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு கோழைத்தனமானது. இந்த குண்டு வெடிப்பில் இளம் பெண் சுவாதி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது.
டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்வாதி சிறந்த ஊழியர் ஆவார். அவர் தன் சொந்த ஊருக்கு திரும்புகையில் நிகழ்ந்த கொடூரமான சம்பவத்தில் தனது உயிரை இழந்துள்ளார்.
ஸ்வாதி தினம்
அவரின் இழப்பு ஈடு செய்ய இயலாது. ஆகையால் ஆண்டுதோறும் தென்னக ரயில்வே சார்பில் மே முதல் நாளை ஸ்வாதி தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நாள் பயணிகள் பாதுகாப்புக்காக அர்ப்பணிக்கப்படும்.
பயணிகளுக்கு விழிப்புணர்வு
மேலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து நிலையிலும் ஆய்வு செய்யப்படும். அதே போல் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக துண்டு பிரசுரங்கள் விநியோகம் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும்.
பரிசோதனைக் கருவிகள்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் சுமார் 2.2 லட்சம் பயணிகள் வருகை புரிகின்றனர். அவர்களின் உடைமைகளை சோதனை செய்ய உதவும் கருவிகள் சரிவர செயல்படுவதில்லை. அவற்றை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
2 மணிநேரத்திற்கு முன்பு
இருப்பினும் அனைத்துப் பயணிகளையும் சோதனை செய்த பின்னரே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிப்பது என்பது எளிதான காரியமல்ல. அவ்வாறு சோதனை செய்த பின்பு அனுமதிக்க வேண்டுமானால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு முன்னரே அவர்களை ரயில் நிலையங்களுக்கு வரவழைக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமில்லை என்றார்.
ஊழியர்களுக்கு பாராட்டு
குண்டு வெடிப்பின்போது மீட்புப் பணியில் துரிதமாக ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுமை தூக்கும் ஊழியர்கள் ஆகியோரை பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா வெகுவாகப் பாராட்டினார்.
மேலும் அவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
மருத்துவமனைக்கு ரூ.20000
தென்னக ரயில்வே சார்பில் வழங்கப்பட்ட மொத்த ரொக்கப் பரிசுத் தொகையான ரூ. 98,700-இல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.