சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் பச்சை தமிழகம் கட்சி போட்டி.... சுப. உதயகுமார் அறிவிப்பு!
பாளையங்கோட்டை: தமிழக சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் பச்சை தமிழகம் கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவர் என்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் அறிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வரும் சுப. உதயகுமார் அண்மையில் "பச்சை தமிழகம்" என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். லோக்சபா தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அவர் கன்னியாகுமரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில்தான் பச்சை தமிழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளதாக உதயகுமார் அறிவித்திருந்தார்.
இதனிடையே பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவைச் சேர்ந்த முகிலனை இன்று சுப. உதயகுமார் சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டசபை தேர்தலில் அணு உலைக்கு எதிரான போராட்டங்களை நடத்திய, ஆதரித்த மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு பச்சை தமிழகம் கட்சி ஆதரவு அளிக்கும்.
ராதாபுரம் சட்டசபை தொகுதியில் பச்சை தமிழகம் கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டு வெற்றி பெறச் செய்வோம். யார் வேட்பாளர் என்பதை பின்னர் அறிவிப்போம் என்றார்.