ஜெ. தீபா வீட்டுக்கு வந்த போலி வருமான வரி அதிகாரியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
ஜெ.தீபாவின் வீட்டுக்கு வந்த போலி வருமான வரித் துறை அதிகாரியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டுக்கு வந்த போலி வருமான வரித் துறை அதிகாரியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர். அந்த வகையில் இன்று அதிகாலை தி.நகரில் சிவஞானம் தெருவில் வசிக்கும் தீபாவின் வீட்டுக்கு ஐடி அதிகாரி என்று சொல்லிக் கொண்டு மித்தேஷ் குமார் என்பவர் வந்தார்.
அப்போது தீபாவின் கணவர் மாதவன்தான் வீட்டில் இருந்தார். 10 மணிக்கு மேல் மேலும் 10 அதிகாரிகள் வந்தவுடன் சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக அந்த அதிகாரி தீபாவை தொடர்பும் கொண்டு பேசினார்.
தகவலறிந்த தீபாவின் வழக்கறிஞர் சம்பவ இடத்துக்கு வந்தார். மித்தேஷ் குமாரின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவருக்கு சந்தேகம் வந்ததை அடுத்து அவர் போலீஸுக்கு தகவல் அளித்தார்.
மித்தேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர் கூறினார். இதையடுத்து போலீஸார் துருவி துருவி கேட்டதை அடுத்து சற்று எதிர்பாராத நேரமாக பார்த்து 10 அடி சுவரில் எகிறி குதித்து தப்பி சென்றார்.
இவரை பிடிக்க மாம்பலம் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலி அதிகாரியை பிடிக்க தேனாம்பேட்டை, தி.நகர், வடபழனி காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மர்ம நபரின் புகைப்படத்தை ரயில் நிலையங்கள், பொது இடங்களில் காட்டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.