தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? - சென்னையில் ஸ்பெஷல் பஸ் டிக்கெட் ரிசர்வேசன் ஆரம்பம்
சென்னை கோயம்பேட்டில் தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு கவுன்டர்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
சென்னை : தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் புக்கிங் கவுன்டர் சென்னையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு கவுன்டர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் இன்று திறந்து வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது : தீபாவளிக்காக வெளியூர் செல்ல 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். சிறப்பு பேருந்துகள் டிக்கெட் முன்பதிவிற்காக இன்று முதல் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
29 கவுனட்ர்கள் திறப்பு
கோயம்பேட்டில் 26 டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டு முன்பதிவு நடைபெற்று வருகிறது. மெப்ஸ் பேருந்து நிலையத்தில் 2 கவுன்டர்கள்,பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் 1 கவுன்டர் திறக்கப்பட்டு டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. அக்டோபர் 15,16,17 நாட்களில் கனரக வாகனங்கள் சென்னைக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது. மதியம் 2 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
சுங்கச்சாவடியில் சிறப்பு ஏற்பாடு
சுங்கச்சாவடிகளில் பேருந்துகளுக்கு தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது, எனவே போக்குவரத்து சிரமமின்றி மக்கள் பாதுகாப்பாக தங்களது ஊர்களுக்கு செல்லலாம். இது மட்டுமின்றி சேலம், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களிலும் போக்குவரத்து சீராக இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான நடவடிக்கை
தனியார் பேருந்து கட்டணத்தை பொறுத்தவரை பெரிய நிறுவனங்களின் கட்டணம் சரியான அளவில் உள்ளது. இதுவரை இணையத்தில் எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 11 ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தகவல் வந்துள்ளது, அவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யார் அதிக கட்டணம் வசூலித்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊர் திரும்பவும் சிறப்பு பஸ்
மழைகாலங்களில் ஒழுகக்கூடிய பேருந்துகளை கணக்கெடுத்து அவற்றை சரிசெய்திருக்கிறோம். பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 3 ஆயிரத்து 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போன்று மற்ற ஊர்களிலும் சிறப்பு பேருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.