தீபாவளிக்கு சுவீதா, சூப்பர் பாஸ்ட், சிறப்பு ரயில்கள்: ஆர்வமில்லா பயணிகள்... இன்னும் டிக்கெட் இருக்கு
சென்னை: தீபாவளி பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் வழக்கமாக முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அதிக அளவு விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைந்த அளவே டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை எழும்பூர்-கோவைக்கு வருகிற 9ம் தேதி சிறப்பு ரயில்(வ.எண்.06111) இயக்கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 9 மணிக்கு கோவையை சென்றடையும்.
கோவையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 11ம் தேதி சிறப்பு ரயில்(06112) இயக்கப்படுகிறது. இந்த ரயில் கோவையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 4.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
சுவீதா சிறப்பு ரயில்
திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக மேற்குவங்காளம் சந்திரகாச்சிக்கு 8ம் தேதி சுவீதா சிறப்பு ரயில்(06113) இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு மாலை 4.15 மணிக்கு வந்தடையும்.
மேற்குவங்கம் டூ திருச்சி
மேற்குவங்காளம் சந்திரகாச்சியில் இருந்து திருச்சிக்கு சுவீதா சிறப்பு ரயில்(06114) 10ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் சந்திரகாச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு 11ம் தேதி மாலை 3.30 மணிக்கு எழும்பூரை வந்தடையும். அதன் பின்னர், அன்று இரவு 9.30 மணிக்கு திருச்சியை இந்த ரயில் சென்றடையும்.
நாகர்கோவில் டூ சென்னை
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக பாட்னாவுக்கு வருகிற 9ம் தேதி சிறப்பு ரயில்(06115) இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11 மணிக்கு எழும்பூரை வந்தடையும். அதன் பின்னர் 11ம் தேதி மாலை 3.15 மணிக்கு பாட்னாவை சென்றடையும்.
பாட்னா டூ சென்னை
பாட்னாவில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக நாகர்கோவிலுக்கு வருகிற 12ம் தேதி சிறப்பு ரயில்( 06116) இயக்கப்படுகிறது. இந்த ரயில் பாட்னாவில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு, 14ம் தேதி காலை 4 மணிக்கு எழும்பூரை வந்தடையும், அதன் பின்னர் நாகர்கோவிலுக்கு அன்றைய தினம் மாலை 4.45 மணிக்கு சென்றடையும்.
நாகர்கோவில் டூ சென்னை
நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 7ம் தேதி சிறப்பு ரயில்(06117) இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
நவம்பர் 8 சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரவில் இருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 8ம் தேதி சிறப்பு ரயில்(06118) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் அனைத்துக்கும் நேற்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது.
காலியான இடங்கள்
வழக்கத்துக்கு மாறாக சென்னை எழும்பூர், சென்டிரல் ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு நேற்று மந்தமாகவே இருந்தது. டிக்கெட் கவுண்ட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 9ந் தேதி காலை 10.15 மணிக்கு எழும்பூர்-கோவை சிறப்பு ரயிலில் படுக்கை வசதியில் 172 இடங்களும், 3ம் வகுப்பு ஏ.சி. 40 இடங்களும் காலியாக உள்ளன. மறுமார்க்கத்தில் இந்த ரயிலில் (06112) படுக்கை வசதி 95 இடங்களும், 3ம் வகுப்பு ஏ.சி. 37 இடங்களும் காலியாக உள்ளன.இருந்தன.
ஆர்வமில்லாத பயணிகள்
9ம் தேதி பாட்னா-நாகர்கோவில் சிறப்பு ரயிலின் (06115) படுக்கை வசதி 300 இடங்களும், 3ம் வகுப்பு ஏ.சி. 22 இடங்களும் காலியாக உள்ளன. 7ம் தேதி நாகர்கோவில்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலில் (06117) படுக்கை வசதி 476 இடங்களும், 3ம் வகுப்பு ஏ.சி. 86 இடங்களும் காலியாக உள்ளன. மற்ற சிறப்பு ரயில்களிலும் ஏராளமான காலியிடங்கள் உள்ளன.
அதிகாரிகள் நம்பிக்கை
இது குறித்து கருத்து கூறிய அதிகாரிகள், சிறப்பு ரயில்கள் குறித்து பயணிகள் இன்னும் அறியவில்லை என்று கருதுகிறோம். பண்டிகை காலத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் தீபாவளி ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவின் தொடக்க நாளிலேயே பயணிகள் ஒருசிலரே வந்திருந்தனர். அடுத்த நாட்களில் பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில் அதிக கட்டணம் கொண்ட சுவிதா, சூப்பர் பாஸ்ட் ரயில்கள் அறிவிக்கப்பட்டதே பயணிகளின் ஆர்வமின்மைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.