அரசியலில் ஆன்மிகம் தவறாகத் தான் முடியும்... என்ன இப்படி சொல்லிட்டாரு தினகரன்!
ஆன்மிகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாகத் தான் போய் முடியும் என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : அரசியலில் ஆன்மிகம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறாகத் தான் முடியும் என்று ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : முதல்வர் பழனிசாமி அணியில் இருக்கும் ஸ்லீப்பர் செல்கள் வாக்கெடுப்பு சமயத்தில் தங்களது இருப்பை வெளிக்காட்டுவார்கள். விசாரணை ஆணையத்தில் அளித்துள்ள பென்டிரைவில் இருந்த காட்சிகளில் ஒரு பகுதியைத் தான் வெற்றிவேல் வெளியிட்டிருந்தார். என்னிடம் என்ன வீடியோ ஆதாரம் இருந்ததோ அதைத் தான் விசாரணை ஆணையத்திடம் கொடுத்திருக்கிறேன்.
ஆளுநர் உரை முடியட்டும் சட்டசபையில் நான் எப்படி செயல்படுகிறேன் என்பதை பார்க்கலாம். என்னுடைய நன்றி தெரிவிக்கும் பேச்சில் ஆர்கே நகர் தொகுதி பிரச்னை மட்டுமின்றி, தமிழகத்தில் பாதிக்கப்படும் விஷயங்கள் மற்றும் நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகள் பிரச்னை குறித்து பேசுவேன்.
மாநில சுயாட்சிக்கு கேடு விளைவிக்கும் செயல்களை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது. முத்தலாக் சட்டம் அவசர கதியில் கொண்டுவரப்படுகிறது. சட்டதிருத்தத்தை தவறாக பயன்படுத்த முடியும் என்பதால் இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களின் கருத்தை கேட்டு முத்தலாக் சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
பாஜகவை காரணம் இல்லாமல் எதிர்க்கவில்லை
மத்திய அரசை கண்மூடித் தனமாக எதிர்க்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணமல்ல. தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் ஜெயலலிதா மத்திய அரசுடன் சுமூகமான உறவை கடைபிடித்தார். நல்ல திட்டங்களை வரவேற்பதும், கொள்கைகளை பாதிக்கும் விஷயத்தில் எதிர்ப்பதும் தான் ஜெயலலிதாவின் பண்பு அதைத் தான் நானும் கடை பிடிக்கிறேன்.
அரசியலில் ஆன்மிகம் தவறாக முடியும்
ஆன்மிகம் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட விருப்பம். எனக்கு கடவுள் பக்தி இருப்பதால் உங்களுக்கும் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. ஆன்மிகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்தக் கூடாது அது தவறாகப் போய் முடியும் என்பது தான் என்னுடைய கருத்து.
நமக்கு ஒத்துவராது
பாஜக ஆன்மிகத்தை கையில் எடுத்துக் கொண்டு பெருவாரியான இந்துக்களை பாதுகாக்கிறோம், சிறுபான்மை நலன் என்று சொல்லி பெரும்பான்மைக்கு எதிராக செயல்படுவதாகச் சொல்கிறார்கள். அதைப் போன்றெல்லாம் கிடையாது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு, நாம் இந்தியர்கள் என்ற உணர்வோடு பழகிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நூற்றாண்டிலா ஆன்மிக அரசியல்
மதம் என்பது வாழ்க்கை முறை, இறை வழிபாடு என்பது ஒழுக்கத்திற்காக கடைபிடிப்பது. அதை அரசியலில் கொண்டு வருவது வேறு மாதிரியாகிவிடும். ஒரு மதத்தின் நல்ல விஷயம் மற்றொரு மதத்திற்கு ஒத்துவராது, அதை எடுத்துக் கொண்டு இந்த நூற்றாண்டில் ஆன்மிக அரசியல் என்று சொல்வது சரியானதாக இருக்காது என்பது என்னுடைய கருத்து என தினகரன் கூறியுள்ளார்.