இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 85 பேர் விடுதலை
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 85 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் : இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 85 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஒரு சில தினங்களில் தமிழகம் வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 38 பேர், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 26 பேர் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 21 பேர் என மொத்தம் 85 தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர்.
அப்போது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடந்த 2 மாத காலமாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தமிழக மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் கொடூரமாக சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனை தணிக்க, இலங்கை சிறையில் இருக்கும் 85 தமிழக மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 53 மீனவர்களை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யப்பட்டனர்.
அதேபோல் வவுனியா சிறையில் இருந்த 24 மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யப்பட்டனர். மேலும் திரிகோணமலை சிறையில் இருந்த 8 பேரும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஒரு சில தினங்களில் தமிழகம் வருவார்கள் என மீனவர்கள் விடுதலை கூட்டமைப்புத் தலைவர் அருளானந்தம் கூறினார்.
மீனவர்களை மட்டும் விடுதலை செய்த இலங்கை அரசு, படகுகளை பற்றி எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.