சென்னையில் இருந்து இலங்கை புத்த துறவிகள் வாரணாசி பயணம்- பலத்த போலீஸ் பாதுகாப்பு!
சென்னை: சென்னையிலிருந்து வாரணாசி செல்வதற்காக வந்த இலங்கை புத்த துறவிகள், யாத்ரீகர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில், முதல்வர் ஜெயலலிதா பற்றி சமீபத்தில் அவதூறு கருத்து வெளியாகியது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இலங்கைக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருவதையடுத்து வியாபாரம், சுற்றுலா என பல்வேறு நோக்குடன் தமிழகத்திற்கு வரும் இலங்கை நாட்டு பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்திற்கு வருகிற இலங்கைவாசிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு புனித யாத்திரை செல்வதற்காக இலங்கையை சேர்ந்த புத்தமத துறவிகள் மற்றும் யாத்ரிகர்கள் 140 பேர் சென்னை வந்தனர். அவர்கள் எழும்பூர் கென்னத் லேன் பகுதியில் உள்ள சிங்கள புத்த மடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து நேற்று மாலை 140 பேரும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வேனில் பத்திரமாக அழைத்து வரப்பட்டு "கங்கா காவேரி எக்ஸ்பிரஸ்" ரயிலில் வாரணாசிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இலங்கையை சேர்ந்த புத்தமத யாத்திரிகர்களின் பாதுகாப்பிற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் மற்றும் மாநகர போலீசார் என மொத்தம் 100 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.