இலங்கை அதிபர் சிறிசேன, மார்ச்சில் இந்தியா வருகை: அமைச்சர் தகவல்
சென்னை: இலங்கையில் அதிபர் சிறிசேனா அமைச்சரவையில் பெரும் தோட்டக்கலை மற்றும் கைத்தொழில் துறை அமைச்சராக உள்ள வேலாயுதம் தயாநிதி, தனிப்பட்ட பயணமாக சென்னை வந்திருந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இலங்கையில் முந்தைய ராஜபக்சே ஆட்சியின்போது தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். இப்போது அங்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவே இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் சிறுபான்மையினருக்கும் பதவிகள் வழங்குவதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.
புதிய அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர், 20 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது தமிழர்களுக்கு சம அந்தஸ்து கிடைத்துள்ளது. தமிழர்கள் மனதில் நம்பிக்கை ஒளி ஏற்பட்டுள்ளது. சிங்கள மக்களும், தமிழ் மக்களும் முழுமையான நல்லிணக்கத்துடன், சம உரிமையுடன், சகோதரத்துவத்துடன் வாழும் நிலை உருவாகி உள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தோட்டத் தொழிலாளர் கள் நலன்களை இலங்கை அரசு பாதுகாக்கும். அவர்களது பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கல்வித்துறை, பொருளாதார மேம்பாடு போன்ற துறைகளில் இந்தியா பெருமளவு பங்களிப்பு செய்துள்ளது. இது தொடர்பாக, இங்கு நான் வருவதற்கு முன்பாக கொழும்பில் இந்திய தூதரகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளான சிகம்பரன், ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் விவாதித்தேன்.
பெருமளவு நிலச்சரிவுகள் நடந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறிசேனா அரசு புதிய வீடுகளை வழங்கும். இந்திய அரசின் நிதி உதவியுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி சம்மதம் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் மாதம் இலங்கை அதிபர் சிறிசேனா, இந்தியாவில் பயணம் மேற்கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.