இந்தோனேசியா கடற்பரப்பில் தத்தளிக்கும் ஈழத் தமிழர்கள்... பாதுகாக்க கோரி ஐநா, மோடிக்கு வைகோ வேண்டுகோள்
சென்னை: இந்தோனேசியா கடற்கரை அருகில் உயிருக்குப் போராடுகின்ற இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை தமிழர்கள் 44 பேர், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்ல திட்டமிட்டு மீன்பிடி படகில் சென்று கொண்டிருந்தனர். ஆஸ்திரேயியா செல்லும் வழியில் இவர்களது படகில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்தோனேஷியாவில், தற்போது அவர்கள் உள்ளனர். ஆனால் உடனடியாக இந்தோனேஷிய கடல் எல்லையை விட்டு வெளியேற அந்நாட்டு கடற்படை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா., அகதிகள் ஆணையத் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
தமிழர்கள் சந்திக்கும் துன்பம்
2009 ஆம் ஆண்டு, இலங்கை ராணுவம் நடத்திய கோரமான படுகொலைத் தாக்குதல்களில் ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் இனப் படுகொலை நடந்து முடிந்தபின்னரும், அதனுடைய பின் விளைவான துன்பமும், துயரமும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை இன்றைக்கும் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கின்றது.
அகதிகளாக தஞ்சம்
காணாமல் போன ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதே தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கானோர் ராணுவ முகாம்களிலும், சிறைகளிலும் வாடுகிறார்கள். இந்தத் துன்பத்தில் இருந்து விடுபட எண்ணிய தமிழர்கள், வேறு நாடுகளுக்குச் சென்று, அதிகளாகத் தஞ்சம் பெறும் நோக்கத்தில் கடல் வழியாகப் படகுகளில் பயணிக்கின்றார்கள்.
கண்ணீரில் தமிழர்கள்
அப்படி ஆஸ்திரேலியாவை நோக்கிப் புறப்பட்ட ஒரு படகின் இயந்திரங்கள் பழுது அடைந்ததால், இந்தோனேஷிய கடற்கரையை ஒட்டிய கடலில் பரிதவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். உதவி கேட்டு அவலக்குரல் எழுப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தோனேஷிய அரசு அவர்களுக்கு உணவு வழங்கி இருக்கின்றது. ஆனால், தங்கள் நாட்டுக் கடற்கரையில் இறங்குவதற்கு அனுமதிக்கவில்லை. வாழ்வதா? சாவதா? என்று புரியாமல், தமிழர்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றார்கள்.
தஞ்சம் கொடுக்கும் நாடுகள்
சிரியா உள்ளிட்ட மத்திய தரைக் கடல் நாடுகளில் இருந்து உயிர் பயத்தால் ஏராளமானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர். அப்படிச் சென்ற அய்லான் என்ற இரண்டு வயதுச் சிறுவன், கிரேக்கக் கடற்ரையில் பிணமாகக் கிடந்தது, உலகெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், சுவிட்சர்லாந்து, சுவீடன் போன்ற நாடுகள் மனிதாபிமானத்தோடு அகதிகளாக வருகிறவர்களை, குறிப்பாக பெண்கள் சிறுவர்களைப் பாதுகாத்துத் தஞ்சம் கொடுக்கின்றன.
நடவடிக்கை வேண்டும்
அதுபோல, இந்தோனேஷிய கடற்கரை அருகில் உயிருக்குப் போராடுகின்ற இலங்கைத் தமிழர்களை, இந்தோனேசிய நாட்டுக் கடற்கரையில் இறங்குவதற்கும், மனிதாபிமானத்தோடு அவர்களைப் பாதுகாப்பதற்கும் இந்தோனேசிய அரசுடன் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.