ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவினர் போயஸ் கார்டனை முற்றுகையிட்டு கோஷம்

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 6 பேரை அ.தி.மு.க.விலிருந்து அதிரடியாக நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று உத்தரவிட்டார். இது திருச்சி அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டர்கள், அரசு சட்டமன்ற தலைமை கொறடா மனோகரனுக்கு எதிராக ரகசிய கூட்டம் போட்டார்கள் என்றும், அந்த கூட்டத்தில் மனோகரனுக்கு எதிராக புகார் மனு தயாரித்து தலைமைக்கு அனுப்ப திட்டமிட்டதாகவும் தலைமைக்கு புகார் சென்றதையடுத்து இந்த அதிரடி முடிவை ஜெயலலிதா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நீக்கப்பட்ட 6 பேரும் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினருடன் நேற்று போயஸ் கார்டனை முற்றுகையிட்டு முதல்வரின் கவனத்தை ஈர்க்க முயற்சித்துள்ளனர். அதன்பின், தலைமைச் செயலகத்திற்கு சென்றவர்கள் அங்கேயும் கோஷமிட்டுள்ளனர். ஆனாலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லையாம்.
இது குறித்து சில கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது, திருச்சி அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் கொடிக்கட்டி பறக்கிறது. எம்.எல்.ஏ. பரஞ்சோதி, எம்.பி. குமார், மனோகரன் உள்ளிட்டவர்கள் ஆளாளுக்கு தனித் தனி கோஷ்டியாக செயல்படுக்கிறார்கள். இவர்களுக்குள் பனிப்போர் தீவிரமடைய காரணமே குமார் இப்போது தலைமைக் கொறடா மனோரனைவிட பெரிய பொறுப்பான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக வந்துவிட்டதுதான்.
இதனால், தங்களுக்கு எதிராக கட்சியில் செயல்படுகின்றவர்களை பழி வாங்குவதே இவர்களுக்கு வேலையாக இருக்கிறது. அந்த கோஷ்டி பூசலால்தான் இந்த 6 பேரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்'' என்றனர்.












Click it and Unblock the Notifications