எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!!
பிளஸ்-2 தேர்வுகள் முடிவு கடந்த 9-ந் தேதி வெளியிடப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9-ந் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11 ஆயிரத்து 552 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 38 ஆயிரத்து 462 பேர் எழுதினார்கள். இவர்களில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 462 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 8 ஆயிரத்து 414 பேர் மாணவிகள். இவர்கள் தவிர தனித்தேர்வர்கள் 74 ஆயிரத்து 647 பேர்கள்.
மேலும் சென்னை புழல் சிறை, திருச்சி மத்திய சிறை ஆகியவற்றிலும் உள்ள சிறைவாசிகள் 119 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள். மொத்தத்தில் 11 லட்சத்து 13 ஆயிரத்து 523 பேர் எழுதினார்கள்.
விடைத்தாள்கள் வழக்கமாக தென்மாவட்டத்தில் உள்ளவை வடமாவட்டங்களுக்கும், வடமாவட்ட விடைத்தாள்கள் தென்மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால் கடந்த ஆண்டு விருத்தாசலம் அருகே விடைத்தாள்களை தேர்வு மையத்தில் இருந்து எடுத்து சென்றபோது ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து சேதம் அடைந்தது.
இப்படிப்பட்ட சேதத்தை தவிர்க்க இந்த ஆண்டு அக்கம் பக்கம் உள்ள மாவட்டங்களிலேயே விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. பின்னர் மதிப்பெண்கள் கோட்டூர்புரத்தில் உள்ள தகவல் மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யப்பட்டு சரி பார்க்கப்பட்டன. அதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் தயார் ஆக உள்ளது.
தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது.
தேர்வு முடிவை அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் www.dge1.nic.in காணலாம். மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.