மவுலிவாக்கம் சம்பவத்தில் மூத்த அமைச்சருக்குத் தொடர்பு, மறைக்க முயல்கிறார் ஜெ. -மு.க. ஸ்டாலின்
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டட கட்டுமானப் பின்னணியில் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சருக்குத் தொடர்பு உள்ளது. இதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா அதை மறைக்க முயற்சிக்கிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழக அரசை கண்டித்தும், அதற்கு சி.பி.ஐ. விசாரணை கோரும் கோரிக்கை மனுவுடன் திமுகவினர் நேற்று சென்னையில் பேரணி நடத்தினர். பின்னர் ஆளுநர் ரோசய்யாவிடம் மனு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், மவுலிவாக்கம் பகுதியில் இரண்டு கட்டடங்களுக்கு அரசாணை வழங்கப்பட்டிருக்கிறது. வழங்கப்பட்டிருக்க கூடிய இந்த அரசாணையில் எந்த வித விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், எந்த நிபந்தனையோடு அதை கட்டிட வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்ல சி.எம்.டி.ஏ. ஒரு கட்டடத்திற்கு அனுமதி தருகிறபோது எந்தெந்த நிலையில் இருக்கிறதோ அந்த துறைகளெல்லாம் பரிந்துரை செய்யவேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இந்த கட்டடங்களை பொறுத்தவரையில் குறிப்பாக உள்ளாட்சித்துறையாவது பரிந்துரை செய்திருக்கிறதா என்றால் உள்ளாட்சித்துறை தெளிவாக பரிந்துரை செய்யவில்லை என்பதை நாங்கள் தெளிவாக அரசாணையிலே நாங்கள் தெரிந்து கொண்டிருக்கிறோம்.
அது மட்டுமல்ல சுப்ரீம் கோர்ட் உடைய உத்தரவுப்படி பார்த்தால் மக்களுடைய பாதுகாப்பில் தான் இந்த விதிமுறைகளின் அடிப்படையிலே விதிவிலக்கு வழங்கிட வேண்டுமென்று குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் இந்த துறையினுடைய அமைச்சராக இருக்கக்கூடியவர் இது குறித்து பேசுகிறபோது ஒன்றை குறிப்பிட்டிருக்கிறார்.
மண் ஆய்வுக்கும், சி.எம்.டி.ஏ.க்கும் சம்மந்தம் இல்லை. கட்டட பராமரிப்புக்கும், சி.எம்.டி.ஏ.க்கும் சம்மந்தம் இல்லை என்று ஒரு தவறான செய்தியை சட்டமன்றத்திலே பேசி அதுவும் அவைக்குறிப்பிலே பதிவாகியிருக்கிறது. அது மட்டுமல்ல இந்த கட்டடத்தை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் சென்ற போது அப்போது பத்திரிகையாளர்களிடத்திலே அவர் சொல்கிறபோது எந்தவித விதிமுறையும் மீறப்படவில்லை. என்று பேசிவிட்டு, அதற்கு பிறகு ஒரு தனி நபர் கமிஷனை நியமித்திருக்கிறார்.
சில அதிகாரிகளை கொண்டு ஒரு குழுவையும் ஆய்வு செய்வதற்கு அதுவும் அமைத்திருக்கிறார். ஆகவே முதலமைச்சரே ஏற்கெனவே தீர்ப்பு தந்துவிட்ட பிறகு தனி நபர் விசாரணை மூலமாகவோ, அல்லது அதிகாரிகள் கொண்ட ஆய்வுக்குழு மூலமாகவோ, நிச்சயமாக நியாயம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
எனவே தான் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதற்காக தான் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று கவர்னரிடத்திலே திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பிலே மனுவை தந்திருக்கிறோம். அவரும் அதை படித்துப் பார்த்துவிட்டு இதற்கான அரசுதுறையையும் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று எங்களிடம் கூறியிருக்கிறார் என்றார் ஸ்டாலின்.
அதிமுக அமைச்சரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஸ்டாலின் பதிலளிக்கையில், அதை மூடி மறைக்கத்தான் ஜெயலலிதா முயற்சிக்கிறார் என்று நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோருகிறோம். ஜி.ஒ. காப்பி என்னிடம் உள்ளது. அதில் கட்டடங்களுக்கான அனுமதி வழங்குவது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த கட்டிடத்திற்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் வெறுமனே அனுமதி வழங்கியிருப்பது, இதுவே பெரிய சாட்சி. அதனால் கண்டிப்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.