பொய் சொல்லி பொற்காசுகள் வாங்க போட்டி நடைபெற்றால் ஜெ.,வுக்கு முதல் பரிசு.. ஸ்டாலின் சாடல் !
வேலூர்: "பொய் சொல்லி" பொற்காசுகள் வாங்க போட்டி நடைபெற்றால் ஜெயலலிதாவே முதல் பரிசை தட்டிச் செல்வார். போயஸ் கார்டனை விட்டு புறப்படும் போதே இன்று என்னென்ன பொய்களை மேடையில் அவிழ்த்து விட வேண்டும் என்று சத்தியம் செய்து விட்டு அவர் பிரச்சார மேடைக்கு செல்வதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், ஜெயலலிதா வெறும் பொய்களை மட்டுமே பேசி மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும், வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றமாலே, நிறைவேற்றி விட்டதாக பொய் சொல்வதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் "பொய் சொல்லி" பொற்காசுகள் வாங்க போட்டி நடைபெற்றால் ஜெயலலிதாவே முதல் பரிசை தட்டிச் செல்வார், அந்த அளவுக்கு போயஸ் கார்டனை விட்டு புறப்படும் போதே இன்று என்னென்ன பொய்களை மேடையில் அவிழ்த்து விடலாம் என்று சத்தியம் செய்து மேடைகளுக்கு ஜெயலலிதா செல்வதாக விமர்சித்தார்,
"எந்த வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்பும் அது பற்றி 100 தடவை அல்ல. 1000 முறை யோசித்து வாக்குறுதி தருபவர் ஜெயலலிதா" என்று கூறியிருக்கிறார். கடந்த 2011 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியில் எதையாவது நிறைவேற்றி இருக்கிறாரா என்று வாக்குறுதிகளை பட்டியலிட்டு கேள்வி எழுப்பினர் ஸ்டாலின்.
"சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய மாநகரங்களில் சிங்கப்பூரில் இருப்பது போல் மோனோ ரயில்" என்று அறிவித்தீர்கள். இன்றைக்கு சென்னையிலோ, கோவையிலோ, மதுரையிலோ, திருச்சியிலோ இந்த மோனோ ரயில் ஓடுகிறதா? 1000 தடவை யோசித்திருந்தால் எங்கே ஓடுகின்றன அந்த மோனோ ரயில்கள்?
151 நகராட்சிகளில் 2012க்குள் நகராட்சி கழிவைக் கொண்டு 1000 மெகாவாட் மின்சாரமும், 3000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரமும், ஆக மொத்தம் 5000 மெகாவட் மின்சாரம் 2013 ஆம் ஆண்டிற்குள் தயாரிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். நடுத்தர வகுப்பு மக்களுக்கு 40 லட்சம் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்தீர்கள். தமிழ்நாட்டில் எங்கு 40 லட்சம் பேருக்கு பசுமை வீடுகள் இந்த ஐந்து ஆண்டுகளில் கட்டிக் கொடுத்திருக்கிறீர்களா?
2015க்குள் 100 பெரிய பால் பண்ணைகள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் சிறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என்று கூறினீர்கள். தமிழகத்தில் நீங்கள் துவங்கிய 100 பெரிய பால்பண்ணைகளை பட்டியலிட முடியுமா?
கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்கப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தீர்கள். கச்சத்தீவை மீட்டு விட்டீர்களா? மீனவர்கள் நலனைக் காப்பாற்றி விட்டீர்களா? வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். இங்கே வந்திருக்கின்ற உங்களில் யாருக்காவது அரசு 20 லிட்டர் இலவசமாக குடிநீர் கிடைத்ததா ?
இப்படி 2011 தேர்தல் அறிக்கையில் சொல்லி நிறைவேற்றாத அனைத்து வாக்குறுதிகளுக்கும் என்னால் பட்டியலிட முடியும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என்று ஜம்பம் அடிக்கும் நீங்கள் ஒரே மேடைக்கு வந்து என்னுடன் ஆதாரங்களுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என்று ஜெயலலிதாவிற்கு சவால் விடுத்தார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications