பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா? ஜெ.வுக்கு ஸ்டாலின் சவால்
சீர்காழி: தமிழகத்துக்கு அதிக நன்மைகள் செய்தது திமுகவா? அல்லது அதிமுகவா? என்பது குறித்து பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா என்று முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
திமுக தலைமையிலான ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை லோக்சபா தொகுதி வேட்பாளர் ஹைதர் அலியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். சீர்காழியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது,
"தமிழ்நாட்டில் தற்போது மின்வெட்டு பிரச்னை அனைவரையும் பாதித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது. அதற்கே மக்கள் தந்த தீர்ப்பு ஆட்சி மாற்றம். ஆனால் இப்போது 10 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு உள்ளது. இதற்கு மக்கள் என்ன தீர்ப்பு வழங்கப்போகுறீர்கள்.
காவிரி நதிநீர் பிரச்னையில் அதிக முனைப்புடன் செயல்பட்டது கருணாநிதி மட்டுமே. காவிரி நிதிநீர் பங்கீட்டு பிரச்னையில் நமது உரிமைக்காக போராடி, 200 டி.எம்.சி தர வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றோம். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதற்கு முக்கிய காரணம் திமுக தான்.
தமிழக மீனவர் பிரச்னைக்காக மத்திய அரசிடம் அதிகம் குரல் கொடுத்தது திமுக தான். நாகையில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய போது, திமுக தலைவர் கருணாநிதி, உடனடியாக டி.ஆர்.பாலுவை தொடர்பு கொண்டு, அவரை இங்கே வரவழைத்து சமரசம் பேச வைத்தார். அதோடு மட்டுமல்லாமல், டெல்லியே பிரதமரை நேரில் சந்தித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனால் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், 17 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக தமிழர்களுக்காக என்ன செய்தது என்று தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். மத்திய அரசிலே திமுக பங்கேற்றதால் தமிழகத்துக்கு கிடைத்த நன்மைகள் என்ன என்பதை திமுக தேர்தல் அறிக்கையிலே பட்டியலிட்டிருக்கிறோம். அந்த தைரியம் எங்களுக்கு உள்ளது. ஆனால் அதிமுக வாஜ்பாஸ் அமைச்சரவையிலும், நரசிம்மராவ் தலைமையிலான மத்திய ஆரசிலும் அங்கம் வகித்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தது என்று கூற முடியுமா?
திமுக மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்த போது தமிழகத்துக்கு என்ன நன்மைகள் கிடைத்தன என்பதை புள்ளி விவரங்களுடன், ஆதார பூர்வமாக நிருபிக்க நான் தயார், இதுகுறித்து பொது மேடையில் விவாதிக்க நீங்கள் தயாரா?. முதலமைச்சர் வராவிட்டாலும், அவருக்கு கீழ் பணியாற்றும் அமைச்சர்களையாவது அனுப்பி வைக்க அவர் தயாரா? ". இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.