ஜெயக்குமாருக்கு சூப்பர் முதல்வர் என நினைப்பு... போட்டு தாக்கும் ஸ்டாலின்
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் போலி வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். போலி வாக்காளர்களை நீக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் போலி வாக்காளர்கள் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார். போலி வாக்காளர்களை நீக்கக் கோரி தமிழக தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அவர் கூறினார்.
நெல்லையில் கந்து வட்டி கொடுமையினால் தம்பதியினர் குழந்தைகளுடன் தீக்குளித்தது அதிர்ச்சியளிப்பதாக கூறிய ஸ்டாலின், குதிரை பேர ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்றார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தன்னை சூப்பர் முதல்வராக நினைத்துக்கொண்டு செயல்படுகிறார். எனவேதான் மீனவர்கள் போராட்டம் நடத்துவதாகவும் கூறினார்.