தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைச் சந்திப்பவர்களில் ஜெ. தான் முக்கியமானவர்: ஸ்டாலின்
பெரம்பலூர்: தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைச் சந்திப்பவர்களின் முக்கியமானவர் முதல்வர் ஜெயலலிதா என திமுக பொருளாளர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று, திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், பெரம்பலூர் அருகே உள்ள குன்னம் சட்டசபைத் தொகுதியில் நேற்று அவர் திமுக வேட்பாளர் தங்க.துரைராஜூக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது அங்கு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசியதாவது:-
தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து போகும் வழக்கம் கொண்டவர்கள் பலர் உள்ளனர். அதில் முக்கியமானவர் ஜெயலலிதா. 2011 -ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த பிறகு என்றாவது ஒரு நாள் இந்த குன்னம் பகுதிக்கு ஜெயலலிதா வந்ததுண்டா? இந்த மாவட்டத்திற்காவது வந்ததுண்டா? இந்த மண்டலத்திற்காவது வந்து மக்களை சந்தித்து குறைகளை கேட்டதுண்டா என்று கேட்டால் இல்லை. தேர்தலுக்கு தேர்தல் ஹெலிகாப்டரில் பறந்து வந்து கூட்டப்பட்ட கூட்டத்தில் ஆங்காங்கே பேசுகிறார்.
ஆனால் இங்கு வந்திருப்பவர்கள் தானாக வந்தவர்கள். பணம், பொட்டலம் ஆகியவை கொடுத்து வந்தவர்கள் அல்ல. ஜெயலலிதா கூட்டும் கூட்டங்களில் அண்ட புளுகு, ஆகாச புளுகு என்பது போல, பொய்யில் பிறந்து பொய்யில் வளர்ந்தது போலவும் பேசுகிறார். இந்திய அளவில் பொய்யை மட்டுமே பேசுக்கூடிய ஒரே முதல்வர் ஜெயலலிதா மட்டும்தான்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மதுவிலக்கு அறிவிப்பில் ‘பூரண மதுவிலக்கு'என்று இல்லை என்கிறார் ஜெயலலிதா. மதுவிலக்கு சட்டம் கொண்டு வரப்படும் என்றாலே அது பூரண மதுவிலக்காகவே இருக்கும். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என கூறுகிறார் ஜெயலலிதா. ஆனால், மதுவுக்கு எதிராக போராடிய சசிபெருமாள் மரணம் தான் அதிமுக அரசின் சாதனை.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் திமுக ஆட்சிகாலத்தில் தலைவர் கலைஞர் அவர்களால் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதைப்போலவே அ.ராசா எம்.பி., மத்திய அமைச்சர் ஆகிய பகுதிகளில் இருந்தபோது பல திட்டங்கள் நடைபெற்றன. அவற்றுள் சிலவற்றை மட்டும் உங்களிடம் எடுத்துக் கூற விரும்புகிறேன்.
- திமுக ஆட்சிகாலத்தின் போது அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ ஆகிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
- திமுக ஆட்சியின்போது குன்னத்தில் மருத்துவக்கல்லூரி உருவாக்க திட்டமிடப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதிமுக அரசு வந்ததும் அதனை கிடப்பில் போட்டு விட்டது. அதனை தொடர்ந்து இருந்தால் அந்த கல்லூரி செயல்படத் தொடங்கியிருக்கும்.
- வேப்பந்தட்டு வரை கூட்டுக் குடி நீர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு பைப்லைன் அமைத்து குடிநீர் தந்த ஆட்சி திமுக ஆட்சி.
- அரியலூர் விசவக்குடி நீர்தேக்கம் 33 கோடி மதிப்பில் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது.
- அரியலூரில் பாதாள சாக்கடை திட்டம் திமுக அரசு நிறைவேற்றியது.
ஆனால் அதிமுக அரசு செய்வதாக 2011 -ம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிகள் பல இன்றுவரை நிறைவேற்றவில்லை என்பதற்கு உதாரணமாக சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.
- ஜெயங்கொண்டத்தில் முந்திரி தொழிற்சாலை, முந்திரி ஆய்வு மையம், வீரிய விதைகளை இலவசமாக வழங்கும் திட்டம் ஆகிய வாக்குறுதிகளை வழங்கிய அதிமுக அரசு அவற்றை செயல்படுத்தவில்லை.
- தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் டிராக்டர்கள் ஜப்தி செய்யப்பட்டு விவசாயிகளின் வாழ்க்கை அழிந்தது இந்த பகுதியில் தான்.
- திமுக ஆட்சியில் அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால் அதிமுக அரசு 60% முதியோர் உதவி தொகைகள் நிறுத்தப்பட்டு விட்டன. அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முதியோர் உதவி தொகை வழங்கப்படுகிறது.
தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி வந்ததும் இப்பகுதியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும். குறிப்பாக,
- விவசாயக் கல்லூரி தொடங்கப்படும்.
- செந்துறையில் திமுக அரசு கொண்டு வந்த கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.
- கொள்ளிடம் ஆற்றில் 6 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்.
- சின்னமுட்டனூர் அணை கட்டப்படும் என உறுதியுடனும், கம்பீரத்துடனும் தெரிவிக்க விரும்புகிறேன்.
கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ராசா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.