உயிரிழந்த பள்ளி மாணவன் நரேந்தர் வீட்டுக்கு சென்று மு.க. ஸ்டாலின் ஆறுதல்
சென்னை: பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளியில் உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு, தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
பள்ளிக்கு தாமதமாக வந்ததாகக் கூறி வாத்துபோல நடக்க வைத்ததால், பத்தாம் வகுப்பு மாணவர் நரேந்தர் புதன்கிழமை மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சென்னை பெரம்பூர் திரு.வி.க. நகர் 17-வது தெருவைச் சேர்ந்தவர் முரளி. அம்பத்தூரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சித்ரபாவை. இவர்களது மகள் ரேஷ்மா மகன் நரேந்தர், திரு.வி.க. நகர் பல்லவன் சாலையில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பொங்கல் விடுமுறை முடிந்து புதன்கிழமையன்று பள்ளி திறக்கப்பட்டது. நரேந்தர் உட்பட சுமார் 30 பேர் தாமதமாக பள்ளிக்கு வந்தனர். அவர்களை உடற்கல்வி ஆசிரியர் ஜெயசிங் தனியாக அழைத்துச் சென்று வாத்து நடை நடந்து பள்ளி மைதானத்தைச் சுற்றி வர வேண்டும் என்று தண்டனை வழங்கினார்.
தாமதமாக வந்த மாணவர்கள் அனைவரும் வரிசையாக வாத்துபோல உட்கார்ந்து மைதானத்தைச் சுற்றி வர ஆரம்பித்தனர். பாதி தூரம் சென்ற நிலையில் நரேந்தர் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே, சக மாணவர்களும் உடற்கல்வி ஆசிரியரும் நரேந்தர் முகத்தில் தண்ணீர் தெளித்து குடிப்பதற்கும் தண்ணீர் கொடுத்தனர்.
பின்னர், ஆட்டோவில் அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள், மாணவனை உடனே ஸ்டான்லி மருத்துமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மாணவர் இறந்த தகவல் அறிந்ததும் பெற்றோரும் உறவினர்களும் நேற்று முன்தினம் இரவே பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நேற்று காலையிலும் போராட்டம் தொடரவே, பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மாணவரின் மரணத்துக்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று பள்ளி முன்பு பல்லவன் சாலையிலும், திரு.வி.க நகர் பேருந்து நிலையம் முன்பும் பொதுமக்கள் மறியல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் சியாமளா தேவி, கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில் மறியல் கைவிடப்பட்டது.
மாணவர் மரணம் குறித்து திரு.வி.க நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங்கை கைது செய்தனர். கவனக்குறைவாக செயல்பட்டதாக பள்ளி தலைமை ஆசிரியர் அருள்சாமியை நேற்று கைது செய்தனர்.
திருவிக நகரில் உள்ள மாணவர் நரேந்தரின் வீட்டுக்கு சென்ற தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.