‘அம்மா’ என்பது பொதுவான வார்த்தை...: ஸ்டாலின் மனுவுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசு சொத்துக்களில் உள்ள அ.தி.மு.க. கட்சி சின்னமான இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவற்றை மறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சொத்துக்களில் உள்ள இரட்டை இலை சின்னங்களை மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.
அதேபோல், எம்.ஜி.ஆர்., நினைவிடம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவதற்கு முன்னரே கட்டப்பட்டது என்பதால் அதில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், அதேசமயம் அம்மா உணவகங்களில் பொறிக்கப்பட்டுள்ள முதல்வரின் படம், இரட்டை இலை சின்னங்களை அகற்ற வேண்டும் என்றும் அந்த விளக்கத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.
மேலும், குடிநீர் பாட்டில்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் எழுதப்பட்டுள்ள 'அம்மா' என்ற வார்த்தையை நீக்குவது பற்றி கூறுகையில், ‘அம்மா' என்பது பொதுவான சொல்லாக இருப்பதால் அதற்கு தடையில்லை. அது குறித்து பின்னர் ஒரு நிலைப்பாடு எடுக்கப்படும். ஆனால், சிற்றுந்துகளில் வரையப்பட்டுள்ளவை இரட்டை இலை சின்னம் போலத் தான் இருக்கிறது. அவை மறைக்கப்பட வேண்டும். தண்ணீர் பாட்டில்களில் உள்ள ஜெயலலிதாவின் படங்கள் அகற்றப்பட வேண்டும். என்று அறிவுறுத்தியுள்ளது. அந்த படங்கள் நடமாடும் விளம்பரமாக ஆகிவிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.