ஆளுநரை வாழ்த்துவதிலும் அரசியலா? தடுத்தது ஏன்?: ஸ்டாலின் புகார்
ஆளுநரை வாழ்த்துவதில் மரபுசார் நடைமுறை கடைபிடிக்கவில்லை என்றும் தடுக்கப்பட்டதாகவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: புதிதாக பதவியேற்ற ஆளுநரை வாழ்த்த சென்ற போது தான் தடுக்கப்பட்டதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதே போன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு
ஆளுநர் பொறுப்பேற்றவுடன் முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் வாழ்த்து தெரிவிப்பதற்காக வரிசையில் காத்திருந்தனர். ஆனால் முதல்வர், துணை முதல்வரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவருக்குத் தான் வாழ்த்து சொல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது மரபாகும்.
Recommended Video
ஆளுநர் நிகழ்ச்சியிலும் அரசியல்
இதனை வலியுறுத்தும் விதமாக மேடைக்கு அருகில் சென்ற ஸ்டாலின் ராஜ்பவன் அதிகாரிகளிடம் எப்போது ஆளுநரை சந்தித்து வாழ்த்து சொல்ல நேரம் கிடைக்கும் என்று கேட்டுள்ளார். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக ஸ்டாலின் அழைக்கப்பட்டார். அவர் ஆளுநரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்து வாழ்த்து கூறினார். அவரையடுத்து திமுகவினர் வாழ்த்து கூறினார்.
விருட்டென்று போன ஸ்டாலின்
தான் புறக்கணிக்கப்பட்டதாக கருதிய ஸ்டாலின் , ஆளுநர் பதவியேற்பு விழா தேநீர் விருந்தில் பங்கேற்காமல் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.
எதிர்கட்சித்தலைவரை அழைக்கலையே
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ஆளுநர் பதவி ஏற்ற பின்னர் முதல்வர், அமைச்சர்கள் வாழ்த்து சொன்னார்கள் அதன் பின்னர் மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற முறையில் நான் சென்றேன். ஆனால் ஓர் அதிகாரி என்னை தடுத்து நீதிபதிகள் வாழ்த்து சொன்ன பிறகு நீங்கள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்றார்.
அதிகாரி தடுத்தது ஏன்?
அப்படிப் பார்த்தால் அமைச்சர்களும் நீதிபதிகள் வாழ்த்துச்சொன்ன பிறகே வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும் அதுதான் மரபாக இருக்கும் என்றேன். ஆனால் அமைச்சர்கள் வாழ்த்து சொன்ன பிறகு என்னை ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்டேன் என்று தெரிவித்தார்.
ஆளுநரிடம் முறையிடுவேன்
வித்யாசாகர் ராவ் செய்த தவறை புதிய ஆளுநர் செய்ய மாட்டார் என நம்பிக்கை இருக்கிறது என சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். மேலும் வாக்கி- டாக்கி ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆளுநரை சந்தித்து முறையீடுவேன் என்று தெரிவித்தார்.