அதிமுக எம்எல்ஏக்கள் குதிரை பேரம்... ஆட்சியை கலைக்க ஸ்டாலின் வலியுறுத்தல்
எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி நடத்தப்படும் ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: குதிரை பேரம் மூலம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி நடத்தப்படும் இந்த ஆட்சியை ஆளுநர் கலைக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவரும், சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின் கோரியுள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் பண பேரம் குறித்து தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வியால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இது குறித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் பண பேரம் குறித்து அவையில் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
இந்த தீர்மானம் தொடர்பாக விவாதிக்க சபாநாயகர் மறுத்ததை தொடர்ந்து சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டனர். மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் சபையில் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார்.
எம்எல்ஏக்கள் விற்பனைக்கு
சரவணன் பேசிய வீடியோ குறித்து துரைமுருகன் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. கடும் அமளிக்கிடையில் 'எம்எல்ஏக்கள் விற்பனைக்கு' என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் சட்டசபைக்கு வந்த திமுக உறுப்பினர்கள் ஜனநாயகத்தை விற்காதே என்று முழக்கமிட்டனர்.
சபாநாயகர் எச்சரிக்கை
சபையை நடத்த ஒத்துழைப்பு தருமாறு திமுக உறுப்பினர்களை எச்சரித்தார் சபாநாயகர். ஆனால் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்களின் பெயர்களை கூறி, அவையிலிருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
சாலை மறியல்
இதனையடுத்து பேரவை வளாகம் முன் உள்ள சாலையில் அமர்ந்து ஸ்டாலின் தலைமையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர் திமுக உறுப்பினர்கள். திமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகரை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எதிர்கட்சியினர் கைது
திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அவர்களும் மறியலில் ஈடுபட்டதால் காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய வாக்கெடுப்பு
கைதுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரிய எங்களை குண்டு கட்டாக வெளியேற்றினர். அன்றைக்கு நடந்த விசயங்கள் உங்கள் அனைவருக்குமே தெரியும். அதிமுக குதிரை பேரம் நடந்ததால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரினோம். தனியார் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த அதிமுக எம்எல்ஏ சரவணன், ஒவ்வொரு எம்.எல்.ஏக்களுக்கும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
கோடிக்கணக்கில் பணம்
யார் யாருக்கு எத்தனை கோடி கை மாறியது என்றும், பணம், தங்கம் கொடுக்கப்பட்டது குறித்தும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், சரவணன், கனகராஜ் கூறியுள்ளனர். எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்பட்டது பற்றி நேரமில்லா நேரத்தை பயன்படுத்தி பேச முயற்சி செய்தேன். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை.
குதிரை பேரம்
குதிரை பேரம் நடந்தது அம்பலமாகியுள்ளது. எம்எல்ஏக்களை கோடி கோடியாக கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர்.
சபாநாயகர் சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார். காவிரி, முல்லை பெரியாறு அணை விவகாரம் நீதிமன்றத்தில் இருந்த போதும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பண பேர விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுப்பது ஏன்?
ஆட்சியை கலைக்க வேண்டும்
எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கியது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும்.
எனவே எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி நடைபெறும் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.