வெளிமாநிலத்தில் வாழும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு.. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்
வெளிமாநிலங்களில் உள்ள தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: வெளிமாநிலங்களில் உள்ள தமிழக மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அஹமதாபாத் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் தமிழக மாணவர் மாரிராஜ் தற்கொலைக்கு முயன்றதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. மருத்துவராகும் கனவோடு எம்.பி.பி.எஸ். முடித்த மாரிராஜ் அஹமதாபாத்தில் உள்ள பி.ஜே மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை தொடர்பான மேற்படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னை அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கவில்லை என்றும், சாதி பெயரில் தரக்குறைவாக நடத்துவதாகவும் கூறி தூக்க மாத்திரை போட்டு மாரிராஜ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்கள் பாதுகாப்பாக படிக்கும் நிலை இங்கு உள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிமாநிலம் சென்று படிக்கும் மாணவர்கள் தாக்கப்படுவதும், தற்கொலைக்கு தூண்டப்படுவதும் வேதனை அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வெளிமாநிலம் சென்று படிக்கும் மாணவர்கள் தாக்கப்படுவதை அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்காக சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மாரிராஜ் தற்போது பாதுகாப்புடன் உள்ளதாகவும், வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு உதவிகள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications