ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன்.. அடுத்தடுத்த வேட்புமனு தாக்கலால் அனல் பறக்கும் தேர்தல் களம்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதேபோல, திமுக பொருளாளர் ஸ்டாலின், கொளத்தூரிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலும் போட்டியிட தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழக சட்டசபைக்கு மே 16ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 22ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல் திருவாரூர் தொகுதியில் மீண்டும் 2வது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி அதே நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போட்டியிடும் பாமக இளைஞரணி செயலாளரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான, அன்புமணி ராமதாசும் நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
இதனிடையே, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று மதியம் 1.30 மணியளவில் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் தொண்டர்களுடன், விஜயகாந்த் வருகை தந்தார். 1.45 மணியளவில், தேர்தல் அலுவலர் முகுந்தனிடம், தனது வேட்புமனுவை விஜயகாந்த் தாக்கல் செய்தார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்- வீடியோ
விஜயகாந்த் போட்டியிடும் 3வது சட்டசபை தேர்தல் இதுவாகும். முன்னதாக விருதாசலம் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதிகளில் போட்டியிட்டு, வென்றவர் விஜயகாந்த்.
இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவரான தொல்.திருமாவளவன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார். 2001 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அவர், அதன் பிறகு 15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதற்காக காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் த்துகுமாரசாமியிடம் இன்று காலை 11.30 மணியளவில் திருமாவளவன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மதியம் 2 மணியளவில், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட, அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கார்த்திகாவிடம் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய சீனியர் தலைவர்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அடுத்த நிலையிலுள்ள தலைவர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.