யாருமே பார்க்க முடியாத ஜெ. எப்படி கைரேகை வைத்தார்? சிபிஐ விசாரணை கேட்கிறார் ஸ்டாலின்!
சென்னை: மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பெறப்பட்ட கைரேகை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் டிவிட்டரில் கூறுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் யாரும் பார்க்கவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார். மூன்று தொகுதி இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் இலாகாவை கவனிக்க ஆளுநருக்கு அறிவுரை வழங்க ஜெயலலிதா கையெழுத்து போட்டதும், கைரேகை வைத்ததும் எப்படி? உடனே சிபிஐ விசாரணை தேவை" என கூறியுள்ளார்.
கடந்த வருடம் செப்டம்பர் 22ம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில், அப்போதைய முதல்வரும், அப்போதைய அதிமுக பொதுச்செயலாளருமான, ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவுக்கு எதிராக இப்போது ஆட்சியிலுள்ள அதிமுகவினர் அணி திரண்டுள்ளனர். இந்த நிலையில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பார்க்க எங்கள் யாரையும் சசிகலா குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக அப்போது பொய் சொன்னோம். அதற்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரையில் நேற்றிரவு நடைபெற்ற அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
#DindigulSreenivaasan pic.twitter.com/G51HccpNsJ
— M.K.Stalin (@mkstalin) September 23, 2017
ஜெ. மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் நடைபெற்ற அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைத்தேர்தல் FORM B-யில் ஜெயலலிதா கைரேகையிட்டதாக கூறி அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு தேர்தலை நடத்தியது. அதிமுக வெற்றியும் பெற்றது, குறிப்பிடத்தக்கது.