சிலைக்கடத்தல் வழக்கில் அன்றிலிருந்து இன்று வரை .... நடந்தது என்ன?
சிலைக்கடத்தல் வழக்கில் அன்றிலிருந்து இன்று வரை நடந்தது என்ன என்பது குறித்து ஒரு தொகுப்பு.
சென்னை: சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ள நிலையில் இந்த வழக்கில் கைதான தீனதயாளன் முதல் கவிதா வரை இங்கு பார்ப்போம்.
2016ம் ஆண்டுதான் சிலைக் கடத்தல் விவகாரம் மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. அந்த ஆண்டு ஜூன் மாதம் தீனதயாளன் என்ற 84 வயது முதியவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த தீனதயாளின் வீட்டு குடோனில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து தலைமறைவான தீனதயாளன் கைது செய்யப்பட்டார்.
மிகப் பெரிய மோசடி
அவரது இருப்பிடங்களில் பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் தமிழகத்தையே உலுக்கும் அளவுக்கு மிகப் பெரிய மோசடி அம்பலத்திற்கு வந்தது. தோண்டத் தோண்ட புதையல் கிடைப்பது போல மிகப் பெரிய அளவிலான சிலைகளை போலீஸார் கைப்பற்றினர். அதன் பின்னர் இந்த வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
பெரிய அளவில் நடித்தியவர்
பொன் மாணிக்கவேல் படையினரின் அதிரடி சோதனையில் பலர் சிக்கினர். தீனதயாளனின் பேரன் தப்பி ஓம்கார் ஓடி தலைமறைவானார். பின்னர் தற்கொலையும் செய்து கொண்டார். தீனதயாளின் கூட்டாளியான சுபாஷ் கபூரையும் போலீஸார் பொறி வைத்துப் பிடித்து அள்ளிக் கொண்டு வந்தனர். இவர் அமெரிக்காவில் இருந்தபடி சிலைக் கடத்தலை மிகப் பெரிய அளவில் நடத்தி வந்தவர் ஆவார்.
தனபால்
பொன் மாணிக்கவேல் படையினரின் அதிரடி வேட்டையில் டிஎஸ்பி காதர்பாட்சா, ஸ்தபதி முத்தையா, பழனி முருகன் கோவில் இணை ஆணையராக இருந்த ராஜா, சினிமா இயக்குநர் வி.சேகர் என அடுத்தடுத்து பலர் சிக்கினர். அதேபோல முன்னாள் இந்து அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபால் என்பவரும் இந்த வழக்கில் சிக்கி கைதானார்.
சிக்கிய அதிகாரிகள்
நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியான கவிதா கைது செய்யப்பட்டார். இன்னும் பல முக்கியப் பிரமுகர்கள், அதிகாரிகள், இந்து அறநிலையத்துறையினரும் இந்த வழக்கில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
நடுநிலை விசாரணை
பல முக்கியப் பிரமுகர்களும் பொன் மாணிக்கவேல் வலையில் சிக்கியுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்கு முன்பாகவே இந்த வழக்கு சிபிஐக்குப் போகவிருப்பது நடுநிலையான விசாரணையை விரும்புவோரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
- செப். 14, 2017- சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த டிஎஸ்பி காதர் பாட்ஷாவை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்
- மார்ச் 22, 2018- பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் தங்கம் கையாடல் என கோயில் தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் நிர்வாகி கே.கே.ராஜா ஆகியோர் கைது
- ஜூன் 27,2018- சிலை கடத்தல் வழக்கு குறித்து அரசிடமிருந்து அழுத்தம் வருவதார சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.
- ஜூலை 8, 2018: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் திருடப்பட்ட வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நெல்லை மாவட்டம் தாழையூத்தை சேர்ந்த பரமதுரையை போலீஸார் கைது செய்தனர்.
- ஆகஸ்ட் 1, 2018- சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக சென்னை நீதிமன்றத்தில் தகவல்