அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவது இனி ”ஈசி” - எளிதாக்கப்பட்ட புதிய நடைமுறை அறிமுகம்
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும் முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் டேவிதார் அனுப்பிய சுற்றறிக்கையில், "பாஸ்போர்ட்டுகளை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுத்துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பெற்றுக்கொள்வதில் கடினமான நடைமுறை இருந்தது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது எளிதாக்கியுள்ளது.
முன்பு பாஸ்போர்ட்டை அவர்கள் பெறவேண்டுமானால், அரசுத் துறையின் ஆட்சேபனையின்மைச் சான்று, அடையாளச் சான்று போன்றவற்றை வாங்கி சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, பாஸ்போர்ட் கேட்டு மண்டல அலுவலகத்திடம் விண்ணப்பிப்பதற்கு முன்பதாக, அவர் பணியாற்றும் துறையின் உயர் அதிகாரிக்கு முன்னறிவிப்பு கடிதத்தை கொடுத்தால் மட்டும் போதுமானது. அவருக்கு பாஸ்போர்ட் வழங்கக்கூடாது என்றால், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு துறையின் உயர் அதிகாரி கடிதம் மூலம் ஆட்சேபனைகளைத் தெரிவித்து, விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுவிடலாம்" என்று கூறப்பட்டுள்ளது.