நாகை, பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகப்பட்டினம்: சென்னை, நாகை, கடலூர், தூத்துக்குடி, பாம்பன், ராமேஸ்வரம், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வந்தது. சென்னையிலும் இன்று பரவலாக மழை பெய்தது. மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் வடக்கு அந்தமானில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுக்கலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து சென்னை, நாகை, கடலூர், தூத்துக்குடி, பாம்பன், ராமேஸ்வரம், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றும், வெப்பசலனம் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் இதனால் ஒடிஷாவிற்கு பாதிப்பு இருக்கும் எனவும் கணித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், திருச்செங்கோட்டில் 10 சென்டி மீட்டரும், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி பகுதிகளில் 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
விருதுநகரில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்தது. அருப்புக்கோட்டையில் பெய்த மழையால் விருதுநகர் சாலை மற்றும் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.