போராட்டம் மட்டும் அல்ல நாங்கள் இதையும் செய்வோம்.. கச்சா எண்ணெய்யை அகற்றும் கல்லூரி மாணவர்கள்
எண்ணூரில் கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: எண்ணூர் துறைமுகப் பகுதியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
எண்ணூர் துறைமுகப் பகுதியில் கடந்த 28ஆம் அதிகாலை காலியாகச் சென்ற கப்பலும் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த மற்றொரு கப்பலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எண்ணெய் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் முழுவதும் வெளியேறி கடலில் பரவியது.
இதனால் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை கச்சா எண்ணெய் படலம் படர்ந்துள்ளது. கடற்பரப்பில் ஒரு அடி உயரத்துக்கு அடர்த்தியாக பரவியுள்ள கச்சா எண்ணெய்யை அகற்றும் பணி இன்று 8வது நாளாக நீடிக்கிறது.
கச்சா எண்ணெய்யை அகற்றும் பணி நீடிப்பு
கச்சா எண்ணெய்யை அகற்ற எந்திரங்கள் கைகொடுக்காததால் மாநகராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியார்கள், தன்னார்வளர்கள் மற்றும் மீனவர்கள் கச்சா எண்ணெய்யை அகற்றி வருகின்றனர். அவர்கள் வாளியைக் கொண்டு அகற்றி வருகின்றனர்.
எண்ணூரில் குவியும் மாணவர்கள்
முன்னதாக எண்ணெய் கசிவை அகற்ற தன்னார்வலர்கள் தேவை என சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தாங்களாகவே எண்ணூர் கடற்கரைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
தாங்களக முன்வந்த மாணவர்கள்
இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக எண்ணூர் கடற்பகுதியில் கல்லூரி மாணவர்களும் கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து கச்சா எண்ணெய்யை அகற்றுவதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
புரட்சி செய்த மாணவர்கள்
அண்மையில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அறவழிப் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக குடியரசுத தலைவர் ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.