கத்தி இசை வெளியீட்டு விழா.. நடந்திடுமா நாளை? வரிந்து கட்டும் மாணவர் அமைப்புகள்!
கத்தி இசை வெளியீட்டு விழா நாளை நிச்சயம் நடக்கும்.. இடம் லீலா பேலஸ் ஓட்டல் என்றெல்லாம் லைக்கா நிறுவனம் அறிவிப்பு மற்றும் விளம்பரங்களை வெளியிட்டு வரும் நிலையில், நடக்க விட்டுவிடுவோமா.. போராட்டத்துக்கு தயாராகிறோம் என வரிந்து கட்ட ஆரம்பித்துள்ளன மாணவர் அமைப்புகள்.
கத்தி படப் பிரச்சினை விஸ்வரூபமெடுத்துள்ளது. ஏராளமான தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என எதிர்த்து நிற்கிறார்கள். தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம், இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் கூட்டாளி என்பதற்கு அசைக்க முடியாத பல ஆதாரங்களை தமிழ் அமைப்புகள் வெளியிட்டுள்ளன. ஆனால் இவற்றை மறுத்து வருகிறது லைகா நிறுவனம். ராஜபக்ச எதற்காக தமிழ்ப் படம் எடுக்க வேண்டும் என்று திருப்பிக் கேட்கும் லைகா உரிமையாளர், தனக்கு ராஜபக்சே குடும்பத்துடன் தொடர்பே இல்லை என்கிறார்.
ஆனால் அவர் சொல்வது அப்பட்டமான பொய் என்பதை புகைப்படங்கள், ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளனர் மாணவர் அமைப்பினர்.
தங்களது எதிர்ப்புகளை மீறி நாளை இந்த விழா எப்படி நடக்கிறது என்று பார்க்கத்தானே போகிறோம் என்று வரிந்து கட்டியுள்ளன இந்த அமைப்புகள்.
இதுகுறித்து முற்போக்கு மாணவர் முன்னணியின் மாறன் கூறுகையில், "இப்படம் (கத்தி) எடுக்க தனது இரண்டு நாள் வருமானம் போதும் என்று கூறும் சுபாஷ்கரன் ஏன் தமிழ் ஈழப் பகுதியில் படங்களை எடுக்காமல் தமிழகத்தில் எடுக்க வேண்டும்?
நாங்கள் முன்னமே கூறியது போல் இங்கு எமக்குள் பிளவு உண்டு பண்ணவே இந்த வேலையை செய்கின்றனர். ஆகவே நாளை சென்னையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பான கத்தி திரைப்பட பாடல் வெளியீட்டை முறுகதாஸ் மற்றும் விஐய் புறக்கணிக்க வேண்டும். தமிழக மக்களின் தீர்மானமாக இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரி இருக்கும் நிலையில் ராஐபக்சேவின் குடும்பத்துடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் லைக்கா நிறுவனம் உடனடியாக தமிழகத்தை விட்டு விலக வேண்டும்.
அப்படி அவர்கள் கலந்து கொள்ள முற்பட்டால் கடும் போராட்டத்தை எடுத்து பாடல் வெளியீட்டை தடுப்போம் என்பதினை மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்," என்றார்.