நீ நீயாக இரு.. பேராசிரியர் சுப. வீர பாண்டியன் பேச்சு
காரைக்குடியில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பேராசிரியர் சுப வீரபாண்டியன் பேசினார்.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையேற்றார். தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா வரவேற்றார். பாரி முடியரசன், காரைக்குடி அகரம் அரிமா சங்க வட்டாரத் தலைவர் பாஸ்கரன்,ஒய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் "நீ நீயாக இரு" என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தனது உரையில், மாணவர்களுக்கு தன்னை பற்றிய தெளிவு, தனக்கு வேண்டியவற்றை தெரிந்து கொள்ளுதல் மற்றும் தன்னை மதித்தல் ஆகிய பழக்கங்கள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என்றார்.
மேலும் மாணவர்கள் ஓவியம், கதை எழுதுதல், விளையாட்டு ஆகிய எதில் ஆர்வம் உள்ளதோ, எத்துறை அவர்களுக்கு பிடித்துள்ளதோ, அதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்று கூறினார். மாணவர்கள் அனைவருக்கும் வாழ்வில் இலட்சியம் இருக்க வேண்டும்.அந்தஇலட்சியத்தை நோக்கிய நமது பயணம் இருக்க வேண்டும் என்றார்.
'ஏமாற்றுபவர்கள் ஏமாற்றப்படுவார்கள்'என்ற கருத்தை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் பாட்டி வடை சுட்டக் கதை மூலம் விளக்கினார். மேலும் அவர் தனது உரையில் மாணவர்களின் நேர்த்தியான உடை, அவர்கள் நிகழ்ச்சியில் அமர்ந்திரிந்த பாங்கு பற்றி பெருமையுடன் பேசினார்.
மாணவர்கள் அவரின் உரையை மிகவும் ஆர்வத்துடன் ரசித்தனர். பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் கோமதி செய்திருந்தார்.