ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும்- சு.சுவாமி
ப.சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் கார்த்தி சிதம்பரம் ஒத்துழைப்பு நல்கவில்லை என்று கூறி இன்று சென்னை விமான நிலையத்தில் அவரை கைது செய்தது.
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தமிழ் தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது எதிர்பார்த்த ஒன்றுதான். இந்த கைது நடவடிக்கை முன்கூட்டியே நடந்திருக்க வேண்டும்.
இந்த வழக்கு விசாரணையில் சிபிஐ, அமலாக்கத்துறையிடம் கார்த்தி சிதம்பரம் பொய் கூறியிருந்தார். விசாரணையில் பொய் கூறுபவர்களை கைது செய்து விசாரணை நடத்தலாம் என சட்டத்தில் உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகவே வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அடிக்கடி லுக் அவுட் நோட்டீஸ் என கூறுவதற்கு பதில் ஏன் கார்த்தியை கைது செய்து விசாரணையை முடிக்க கூடாது என்று சிபிஐயிடம் சென்னை ஹைகோர்ட் கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியே ப.சிதம்பரம்தான். அவர் கையெழுத்து போடவில்லை என்றால் இந்த முறைகேடு நடந்திருக்காது. கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி ப.சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும். ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் என மேலும் பல நடவடிக்கைகள் தொடரும் என்றார்.