சென்னையை குளிர்வித்த திடீர் மழை… இடியும் மின்னலுமாய் வெளுத்து வாங்கியது
சென்னை: சென்னையில் மாலை நேரத்தில் இடியும், மின்னலுமாய் மழை கொட்டியது. காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில் திடீர் மழையால் சென்னைவாசிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
அக்னி நட்சத்திரம் முடிந்தும் தமிழ்நாட்டில் அனல் காற்று வீசுவது நிற்கவில்லை. இதனால் வெளியில் செல்லவே அஞ்சி வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
சென்னை, வேலூர்,மதுரை, திருச்சியில் நூறு டிகிரிக்கும் குறையாமல் வெயில் வாட்டி வந்தது. எனினும் தமிழகம், புதுச்சேரி, வடக்கு, தெற்கு உள் கர்நாடகம், லட்சத்தீவு, தெற்கு கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமா பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
சென்னையில் இன்று காலைமுதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பிற்பகல் மூன்று மணிக்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 4.30 மணிக்கு மேல் இடியும், மின்னலுமாய் மழை கொட்டியது.
மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அடையாறு, நுங்கம்பாக்கம், எழும்பூர், உள்ளிட்ட பகுதிகளில் கொட்டிய மழையால் வெள்ளநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
அனல்காற்று வீசிவந்த சென்னையில் திடீரென பருவநிலை மாறி குளிர்ந்த காற்று வீசியது. இதனால் புழுக்கத்தில் சிக்கித்தவித்த சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திடீர்மழையால் அலுவலகம் சென்றிருந்தவர்கள் வீடு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது. எனினும் மழையை வரவேற்பதாக உற்சாகமுடன் தெரிவித்தனர்.