சென்னையை குளிர்வித்த திடீர் மழை… நீலகிரி, கோவையில் இன்றும் மழை பெய்யுமாம்!
சென்னை: சென்னை நகரில் நேற்றிரவு பெய்த திடீர் மழையால் வெப்பம் மறைந்து குளுமை பரவியது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், பெய்த மழையால் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் நேற்று காலை முதலே வெயில் கொளுத்தியது. அனல் காற்றும் லேசாக வீசியது. மாலை நேரத்தில் மேகமூட்டம் ஏற்பட்டு குளிர்காற்று வீசியது. 6 மணிக்கு மேல் திடீரென சாரலுடன் மழை தொடங்கியது.
மிதமான மழை
சென்னையில் பாரிமுனை, எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சாந்தோம், அடையாறு, தியாகராய நகர், திருவான்மியூர் ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
புறநகரிலும் மழை
அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. மேலும் சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை தீவிரம்
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தின் ஒரு சில இடங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்கிறது.
மழை அளவு விபரம்
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில்
கோவை மாவட்டம் சின்னக்கல்லூரில் 9 செ.மீ., வால்பாறையில் 5 செ.மீ., வால்பாறை தாலுகா ஆபீஸ், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, நீலகிரி மாவட்டம் தேவலா ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, மதுரை மாவட்டம் மேலூர், நீலகிரி மாவட்டம் ஜி பஜார் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் மலைப்பகுதிகளிலும், கோவை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில், மாலை நேரங்களில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.