கொளுத்தும் வெயில்… இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப் போகுதோ?
சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பன்றிக்காய்ச்சலுக்கு கொத்துக்கொத்தாக பலியானோரை பார்த்திருப்போம்... வெயில் வந்தால் பன்றிக்காய்ச்சல் பறந்தோடிவிடும் என்று கூறிய நிலையில் இந்தியாவில் அக்னி வெயிலின் கொடுமை தாங்காமல் சுருண்டு விழுந்து உயிரிழந்து வருகின்றனர். நேற்றுவரை வெயிலிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,200ஐ தாண்டியுள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
இது இந்தியாவில் இயற்கையாக ஏற்படும் இரண்டாவது மிகப்பெரிய உயிர்கொல்லியாக உருவெடுத்துள்ளது. தண்ணீர் மூலம் ஏற்படும் மரணங்கள் முதலிடத்தில் உள்ளது.
ஆந்திரா, ஓடிசாவில் கடந்த வாரங்களில் 117டிகிரி பாரன்ஹீட்வரை வெயில் தகிப்பதால் வெப்பத்தின் கொடுமையை தாங்கமுடியாமல் சுருண்டுவிழுந்து பலியாகி வருகின்றனர். இது உலக அளவில் கோடை வெப்பத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வெயில் பலி
இந்தியாவில் இந்த ஆண்டு கோடை வெப்பத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2200 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் 1998ம் ஆண்டில்தான் இந்தியாவில் கோடை வெப்பத்துக்கு அதிகம் பேர் பலியாகினர் என்றும், அப்போது 2 ஆயிரத்து 541 பேர் கோடை வெப்பத்துக்குப் பலியாகினர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் வெயில் பலி
2010ம் ஆண்டு ரஷ்யாவில் 53 ஆயிரத்து 836 பேர் பலியாகினர் என்றும், 2006 ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் 3 ஆயிரத்து 418 பேர் கோடை வெப்பத்துக்குப் பலியாகினர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வெப்பத்தால் உயிரிழப்பு
இந்தியாவில் 2002ம் ஆண்டில் 1030 பேரும், 2003ம் ஆண்டில் 1210 பேரும் பலியாகியுள்ளனர் என்று புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு 4வது இடம்
இந்த கணக்குப்படி உலக அளவில் வெப்பத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பருவநிலை மாற்றம்
இந்தியாவில் கடந்த 2003 ஆம் ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இதற்கு காரணம் பருவநிலையில் மாற்றத்தால் வெப்பநிலை அதிகரித்துள்ளதே காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.
பருவமழை எப்போது
வெயிலின் கொடுமை அதிகரித்துள்ளதால் உயிருக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டுக்கான பருவமழை வங்க கடலில் ஏற்கனவே பெய்யத் துவங்கிஉள்ளது. அரபி கடலின் சில பகுதிகளிலும் பெய்து வருகிறது. நம் நாட்டை பொறுத்தவரை, கேரளாவில் தான், பருவமழை முதலில் பெய்யும்.
பருவமழைக்கான அறிகுறி
காற்றின் வேகம், அடர்த்தி, மேகங்களின் போக்கு ஆகியவை தான், பருவமழை துவங்குவதற்கு சாதகமான அறிகுறிகள். ஆனால், கேரளாவில் இந்த அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை.இன்னும் ஒரு சில நாட்களில் இந்த அறிகுறி துவங்கும் என, வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது அப்படி துவங்கினால், இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கும் எனவும் வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.